தன்வரலாறு
From Wikipedia, the free encyclopedia
தன்வரலாறு அல்லது சுயசரிதை (autobiography)[1] என்பது ஒரு நபர் தானே எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு ஆகும்.
Autobiography என்ற ஆங்கில மொழிச் சொல்லை முதலில் "மந்த்லி ரிவியூ" என்ற இதழில் 1797 ஆம் ஆண்டில் வில்லியம் டெய்லர் என்பவர் பயன்படுத்தினார். அவர் அதனை இன்றைய பொருளில் பயன்படுத்தவில்லை. அடுத்து இராபர்ட் சௌதி என்பவர் 1809 ஆம் ஆண்டில் இச்சொல்லை இன்றைய பொருளில் பயன்படுத்தினார்.[2] பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இதற்குப் பெயரிடப்பட்டாலும், தானே தன் வரலாற்றை எழுதுவது மிகப் பழங்காலத்திலேயே தொடங்கியது. ராய் பாசுக்கல் என்பவர் தன்வரலாறு என்பதைக் காலத்துக்குக் காலம் எழுதப்படும் சொந்த நினைவுக் குறிப்புக்களில் இருந்தும், நாட்குறிப்புக்களில் இருந்தும் வேறுபடுத்துகிறார். "தன்வரலாறு என்பது, குறிப்பிட்ட ஒரு தருணத்தில் இருந்து கடந்தகால வாழ்க்கையை மீளாய்வு செய்வது என்றும், நாட்குறிப்பு தொடர்ச்சியான பல தருணங்களில் எழுதப்பட்ட நினைவுகள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்".[3] எனவே சுயசரிதை, அது எழுதப்படும் காலத்தில் இருந்துகொண்டு எழுதுபவரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறது. வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் பொதுவாக பலவிதமான ஆவணங்கள் மற்றும் கண்ணோட்டங்களில் தங்கியிருக்கும்போது, சுயசரிதை முற்றிலும் எழுத்தாளரின் நினைவின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். "நினைவுக் குறிப்பு" வடிவம் தன்வரலாற்றோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளபோதும், பாசுக்கல் குறிப்பிடுவது போல் நினைவுக் குறிப்பை எழுதுபவரின் வாழ்க்கையைப் பற்றிய மீளாய்வில் அவரைப் பற்றிக் குறைவாகவும், மற்றவர்களைப் பற்றிக் கூடுதலாகவும் காணப்படும்.[3]