![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Saint_Augustine_by_Philippe_de_Champaigne.jpg/640px-Saint_Augustine_by_Philippe_de_Champaigne.jpg&w=640&q=50)
ஹிப்போவின் அகஸ்டீன்
From Wikipedia, the free encyclopedia
இப்போவின் அகசுடீன் அல்லது இப்போ நகர் புனித அகுசுதீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகுசுதீன் (நவம்பர் 13, 354 – ஆகத்து 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்சீரியாவில் அமைந்திருந்த இப்போ இரீசியசு என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் இப்போ நகர் அகுசுதீன் என அழைக்கப்படுகின்றார்[1].
புனித அகஸ்டீன் (அகுஸ்தீன்) Augustine of Hippo | |
---|---|
![]() புனித அகஸ்டீன் (அகுஸ்தீன்), பிலிப் தே ஷம்பைஞ்-ஆல் வரையப்பட்டது, 17 ஆம் நூற்றாண்டு | |
ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | (354-11-13)நவம்பர் 13, 354 தகாஸ்தே, நுமீதியா (இப்போது சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா) |
இறப்பு | ஆகத்து 28, 430(430-08-28) (அகவை 75) ஹிப்போ ரீஜியஸ், நுமீதியா (தற்போதைய அன்னாபா, அல்ஜீரியா) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் ஆங்கிலிக்கம் லூத்தரன் சபை |
முக்கிய திருத்தலங்கள் | சியேல் தோரோ புனித பேதுரு, பவீயா, இத்தாலியா |
திருவிழா | ஆகஸ்ட் 28 (கத்தோலிக்கம்) ஜூன் 15 (கிழக்கு மரபு) |
சித்தரிக்கப்படும் வகை | குழந்தை; புறா; எழுதுகோல்; சங்கு; குத்தப்பட்ட இதயம்; சிறுகோவிலைத் தாங்கும் புத்தகத்தைப் பிடித்திருத்தல்; ஆயரின் கோலும் தொப்பியும். |
பாதுகாவல் | அச்சிடுவோர்; இறையியலாளர்கள் பிலிப்பைன்ஸ், டூசான்-அரிசோனா, ஸ்பெயின்; |
இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும் இறையியலாளருமான அகுசுதீன் உரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர் மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் மானி (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால்[2] பெரிதும் கவரப்பட்டார். பின்னர் புளோட்டினசு என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கையைத்[3] தழுவினார்.
இக்கொள்கைகளால் அகுசுதீனின் மெய்யியல் தேடலை நிறைவுசெய்ய இயலவில்லை. எனவே, கி.பி. 387இல் அகுசுதீன் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ சமயத்தைத் தழுவினார்.
கிறித்தவர் ஆன பின்பு அகுசுதீன் கிறித்தவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்கு சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட அகுசுதீன் கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறித்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப்போர் கொள்கை (just war theory) என்னும் தலைப்பிலும்[4] அகுஸ்தீன் எடுத்துக் கூறிய கருத்துருக்கள் கிறித்தவத்தில் செல்வாக்குப் பெற்றன.
மேல்நாட்டில் உரோமைப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், அகுசுதீன் தாம் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) என்னும் நூலில், திருச்சபை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால் ஆன்மிக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார்[5]. இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கம் கொணர்ந்தன.
கத்தோலிக்க திருச்சபையும் ஆங்கிலிக்கன் திருச்சபையும் புனித அகுசுதீனைப் பெரிதும் போற்றுகின்றன. இச்சபைகளால் அவர் புனிதர் என்றும் தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" என்றும் மதிக்கப்படுகிறார். புனித அகுஸ்தீனின் திருநாள் ஆகத்து மாதம் 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள் அவர் விண்ணகத்தில் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
அகுசுதீன் மனிதரின் மீட்புப் பற்றியும் கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல புரோட்டஸ்டாண்டு சபைகள், குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றன; அவரை "திருச்சபை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கிழக்கு மரபு சபை அகுசுதீனை "முத்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருநாளை சூன் 15ஆம் நாள் கொண்டாடுகிறது.