தசைவளக்கேடு
From Wikipedia, the free encyclopedia
தசை வளக்கேடு / தசையழிவு / தசை அழிவு (Muscular Dystrophy) என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும், சந்ததிகளூடாக கடத்தப்படக்கூடிய பல தசை நோய்களை உள்ளடக்கி கூட்டாக குறிக்கும் ஒரு சொல்லாகும்[1][2]. இவ்வகையான நோய்களில் எலும்புத்தசை பலவீனம், தசை புரதங்களில் குறைபாடுகள் காணப்பட்டு, அவை தீவிரமடையும்போது தசைக் கலங்களும், தசை இழையங்களும் இறப்புக்குள்ளாகும்[3]. Duchenne, Becker, Limb girdle, Congenital, Facioscapulohumeral, Myotonic, Oculopharyngeal, Distal, Emery-Dreifuss ஆகிய 9 நோய்கள் தசை வளக்கேட்டு நோய்களாக பாகுபடுத்தப்பட்டிருப்பினும்[4] நூற்றுக்கு மேற்பட்ட நோய்கள் இவ்வகையான தசை வளக்கேட்டை ஒத்திருக்கின்றன. இதனால் இதயம், இரையகக்குடல் (gastrointestinal), நரம்புத் தொகுதி, அகச்சுரப்பிகள், தோல், கண்கள், மூளை போன்றவற்றிலும் குறைபாடுகள் ஏற்படும். இதனால் மனநிலை மாற்றங்கள் (mood swings), கற்றலில் சிக்கல்களும் தோன்றலாம்[4].
1860 ஆம் ஆண்டுகளில், வலுவின்மை காரணமாகவும், நடக்கும் திறனை இழந்தும், மற்றும் இளம் வயதிலே இறந்து போகும் சிறுவர்களைப் பற்றிய செய்திகள் மருத்துவ நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார். அதனால் தற்போது அந்த நோயானது டக்சென்னி தசைவளக்கேடு என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. அந்த நோயானது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கு டக்சென்னியின் விளக்கங்கள் மிகப்பெரிய சான்றாக அமைந்தன என்பதுடன், அந்நோய் அனைத்து தரப்பு வயதிலான ஆண்களை பாதித்தது[சான்று தேவை]
.
இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் இந்த நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது. இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும்.[சான்று தேவை]