![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Joan_of_Arc_miniature_graded.jpg/640px-Joan_of_Arc_miniature_graded.jpg&w=640&q=50)
ஜோன் ஆஃப் ஆர்க்
From Wikipedia, the free encyclopedia
ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan of Arc)[3] கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி [4] பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.[5] இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
புனித ஜோன் ஆஃப் ஆர்க் | |
---|---|
![]() கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490) | |
கன்னியர் | |
பிறப்பு | ca. 1412 ஜனவரி 6[1] டாம்ரேமி, பிரான்சு[2] |
இறப்பு | 30 மே 1431 (அகவை 19) ரோவன், பிரான்சு (அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம் ஆங்கிலிக்க ஒன்றியம் |
அருளாளர் பட்டம் | ஏப்ரல் 18, 1909, நோட்ரே டேம் டி பாரிஸ் by பத்தாம் பயஸ் |
புனிதர் பட்டம் | மே 16, 1920, உரோம் by பதினைந்தாம் பெனடிக்ட் |
திருவிழா | மே 30 |
பாதுகாவல் | பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர் |
ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார்.[6] அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.[7] 16ம் நூற்றாண்டில், ஜோன் ஆப் ஆர்க் பிரன்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803ம் ஆண்டில், நெப்போலியன் போனபர்ட் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவரை பிரான்சு நாட்டின் சின்னம் என்று கூறினார்.[8]
பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.