From Wikipedia, the free encyclopedia
ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் (Gerard Pietersz. Hulft, ஆம்ஸ்டர்டாம், 12 திசம்பர் 1621 - கொழும்பு, 10 ஏப்ரல் 1656), என்பவர் டச்சு இராணுவத் தளபதி. இவர் 1655 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.
பீட்டர் அல்ஃப்ட் என்னும் மது உற்பத்தியாளருக்கு இளைய மகனாக நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டம் நகருக்கருகில் லாஸ்டேஜு என்ற இடத்தில் பிறந்தவர் ஜெரார்டு அல்ஃப்ட். தந்தை உள்ளூர் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜெரார்டு அல்ஃப்ட் சட்டக் கல்வி கற்று 1645 ஆம் ஆண்டில் நகரப் பேரவைக்கு செயலாளராகப் பதவியேற்றார். இப்பதவியில் அவர் 1653 வரை பணியாற்றினார்.[1][2] 1652 இல் இவர் பண முதலீடு செய்த சரக்குக் கப்பல் ஒன்று பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. இந்நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற போரில் 24 மாலுமிகளுடன் அல்ஃப்ட் பங்குபற்றினார். போருக்குப் பின்னர் இவர் பணியாற்றிய நிறுவனத் தலைவருடன் இடம்பெற்ற சர்ச்சை ஒன்றை அடுத்து தனது பதவியை இழந்தார்.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் அப்போது இவரது சகோதரர் யோன் ஆளுனநாரக இருந்தார். கம்பனியில் இணைந்த அல்ஃப்ட் ஏப்ரல் 1654 ஆம் ஆண்டில் ஜகார்த்தா சென்றார். இவர் தன்னுடன் டச்சு கிழக்கிந்தியாவின் ஆளுனராகவோ அல்லது பணிப்பாளராகவோ நியமனம் பெறுவதற்கான கடிதங்களையும் கொண்டு சென்றார். ஆறு மாதங்கள் பயணத்தின் பின்னர் அக்டோபரில் பத்தாவியா வந்திறங்கிய அல்ஃப்ட் டச்சுக் கிழக்கிந்தியாவின் பேரவையில் இணைந்தார். ஆகத்து 1655 இல் டச்சுக் கிழக்கிந்தியாவில் ஆளுனர் நாயகமாகப் பதவியில் இருந்த யோவான் மத்சாக்கர் ஜெரார்டை 1120 கடற்படையினருடன் 11 கப்பல்களில் இலங்கைக்கு அனுப்பினார்.[3] இலங்கையை அப்போது கைப்பற்றி வைத்திருந்த போர்த்துக்கேயரைக் கலைப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.[4] 1655 செப்டம்பர் நடுப்பகுதியில் நீர்கொழும்பு வந்தடைந்தனர். இலங்கையில் தங்கியிருந்தபோது இலங்கையின் செல்வாக்குமிக்க அரசனாக இருந்த இரண்டாம் இராஜசிங்கனின் நட்பபைப் பெற்றார் அல்ஃப்ட்.[5]
இலங்கை வந்திறங்கிய அல்ஃப்டும் அவரது படையினரும் மகோனாவில் இருந்து பாணந்துறை வரை சென்று போர்த்துக்கேயர்களுடன் போரிட்டனர்[6]. 1655 அக்டோபரில் களுத்துறைக் கோட்டையைக் கைப்பற்றினர். அதன் மூலம் கொழும்பைக் கைப்பற்ற முனைந்தனர்.[7][8] 1655 நவம்பர் 12 இல் இவர்களது தரப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 350 பேர் காயமடைந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் 1656 ஏப்ரல் 10 இல் இடம்பெற்ற சண்டையில் அல்ஃப்ட் வலது தோளில் காயம்பட்டு இறந்தார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு நகரம் டச்சுக்களிடம் வீழ்ந்தது.[9] இவரது உடல் பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காலிக்குக் கொண்டு செல்லப்பட்டது.[10].
ஜெரார்டு அல்ஃப்டின் நினைவாக, கொழும்பு நகரில் அவரது தலைமையகம் அமைந்த இடத்திற்கு டச்சு குடியேற்றவாதிகளால் "அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என்ற பெயர் வழங்கப்பட்டது. இப்போதும் இது அல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.[11]. இங்கு இலங்கை உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.