![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Ancient_India_-_ta.png/640px-Ancient_India_-_ta.png&w=640&q=50)
கோசல நாடு
From Wikipedia, the free encyclopedia
கோசல நாடு (சமக்கிருதம்: कोसल) என்பது பரத கண்டத்தின் வடக்கில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். இது தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அயோத்தி மாவட்டமாக உள்ளது.[1] கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி நகரம் ஆகும். கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் இச்வாகுவின் வழித்தோன்றல்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Ancient_India_-_ta.png/640px-Ancient_India_-_ta.png)
அங்குத்தர நிக்காயம் எனும் பௌத்த நூலினதும், பகவதி சூத்திரம் எனும் சமண நூலினதும் அடிப்படையில் கிமு 6-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும்.[2] இதன் கலாசார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் காரணமாக இது ஒரு பெரும் சக்தி படைத்த நாடாக மாறியது. எவ்வாறாயினும் பிற்காலத்தில் இது, அதன் அண்டைய நாடான மகதத்துடன் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டமையால் மிகவும் பலவீனப்பட்டு, இறுதியில், கிமு. 4-ஆம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகேதம் மற்றும் சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன. மேலும் சேதவ்யா, உகத்தா[3] தந்தகப்பா, நளகபன மற்றும் பங்கதா போன்ற சிறிய நகரங்களும் காணப்பட்டன.[4] புராணங்களின் அடிப்படையில், இச்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது.[5] கி.மு.6ம் நூற்றாண்டுக்கும், கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் இடையில் கோசலையின் தலைநகரமாக சிராவஸ்தி விளங்கியது.