கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் / From Wikipedia, the free encyclopedia
கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் முந்தைய பெயர் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் பெயரைக் கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியதையடுத்து, பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பெங்களுர் நகருக்கு வடக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் தேவனகல்லி என்ற கிராமத்திற்கு அருகில் இப்பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. பொது-தனியார் கூட்டமைப்பிற்குச் சொந்தமான பெங்களூரு பன்னாட்டு விமானநிலைய நிறுவனம் இதை இயக்குகிறது. பெங்களுர் நகரத்திற்கு சேவை செய்த அசல் முதன்மை வணிக விமான நிலையமான எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அதிகரித்த நெரிசலுக்கு மாற்றாக இந்த விமான நிலையம் மே 2008-இல் திறக்கப்பட்டது. பெங்களூரின் நிறுவனர் முதலாம் கெம்பே கவுடாவின் பெயர் விமானநிலையத்திற்கு வைக்கப்பட்டது. கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் கர்நாடகாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையமாக மாறியது [1][2].
தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை அடுத்து பயணிகள் போக்குவரத்தில் பரபரப்பாக உள்ள மூன்றாவது விமான நிலையம் கெம்பேகவுடா விமான நிலையமாகும். ஆசிய அளவில் 29-ஆவது பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பும் கெம்பகவுடா விமான நிலையத்திற்கு உண்டு. 2017-18 நிதியாண்டில் சர்வதேச போக்குவரத்தைப் பொறுத்தவரை இது தில்லி மற்றும் மும்பை, சென்னை மற்றும் கொச்சினுக்குப் பின்னால் பெங்களுரு விமான நிலையம் நாட்டின் 5-ஆவது பரபரப்பான விமான நிலையமாகும்[3]. 2017 நாட்காட்டி ஆண்டில் 25.04 மில்லியன் பயணிகளை ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களுடன் இந்நிலையம் கையாண்டது. ஏப்ரல் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய மாதங்களுக்கு இடையில் சுமார் 3,86,849 டன் சரக்குகளை இவ்விமான நிலையம் கையாண்டுள்ளது. இந்த சரக்கு அளவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது[4]
இவ்விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதையும் பயணிகள் முனையமும் மட்டுமே உள்ளது. இங்குதான் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கையாளப்படுகின்றன. இரண்டாவது ஓடுபாதை, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது.[5] . கட்டப்படும் பணிகள் தொடக்க நிலையில் இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இரண்டாவது ஓடு பாதை பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வோடு பாதைகள் தவிற ஒரு சரக்கு கிராமம் மற்றும் மூன்று சரக்கு முனையங்கள் இங்கு உள்ளன. விமான நிலையத்தில் ஏர் ஆசியா இந்தியா, அலையன்சு ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா, சிபைசு செட் போன்ற நிறுவனங்களின் விமானங்கள் பறந்து செல்கின்றன.