From Wikipedia, the free encyclopedia
குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) க்கு முந்திய ஞாயிறு வரும்.[1][2][3][4] இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை விவிலியத்தின் நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:
அக்காலத்தில் யூத சமூக மரபுப்படி ஆளுநர்கள், அரசர்கள், தலைமைக் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்பள வரவேற்பு பெறுதல் ஆகிய உயர் பெருமை நிலையைப் பெற்றிருந்தனர். மக்களும் இம்மூவர்களுக்கு மட்டுமே ஒலிவ் மர குருத்து ஏந்தி வரவேற்பு அளிப்பர். ஆனால் தச்சரின் மகனான இயேசு, மக்கள் செல்வாக்கு மிகுதியால் கழுதை மேல் அமர்ந்து கம்பள வரவேற்புடன் தலைநகர் எருசலேமில் அரசரைப் போல நுழைந்தார். எருசலேம் மக்களும் அவருக்கு அரச மரியாதையுடன் ஒலிவ் மர குருத்து ஏந்தி ஆடம்பரமான வரவேற்பு அளித்தனர். இது அந்த கால அரசியல் சூழலில் சாதாரண செயல் அல்ல. ஏற்கனவே தலைமைக் குருக்கள் இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய தகுந்த காரணத்தை தேடிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அவர் மக்கள் ஆதரவுடன் எருசலேம் நகரில் நுழைந்ததை இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இயேசுவின் மீதான தலைமைக் குருக்கள், பரிசேயர், அரசியல் தலைவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்நிகழ்விற்கு பின்னர் இயேசுவைக் கொலை செய்யும் முயற்சியை வேகப்படுத்தினர். ஆனால் இயேசு தான் பாடுகள் பட்டு கொடிய சிலுவை மரணம் அடைவதற்காகத் தான் எருசலேம் வருகிறோம் என்பதையும், மக்களுடன் தனது இறுதி பயணம் இது தான் என்பதையும் உணர்ந்திருந்தார். இந்நிகழ்வு நடந்த அதே வாரத்தில், இயேசு கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார்.
நற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்[5]. இயேசு ஒரு "கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்." அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்
“ | ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! |
” |
என்று கூறி ஆர்ப்பரித்தனர்.[1][2][3] இப்பாடல் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).
யோவான் நற்செய்திப்படி மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: யோவான் 12:13). இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. இயேசுவை மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் சாவு வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காணவேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள்.
ஆண்டு | மேற்கு | கிழக்கு |
---|---|---|
2017 | ஏப்பிரல் 9 | |
2018 | மார்ச்சு 25 | ஏப்பிரல் 1 |
2019 | ஏப்பிரல் 14 | ஏப்பிரல் 21 |
2020 | ஏப்பிரல் 5 | ஏப்பிரல் 12 |
2021 | மார்ச்சு 28 | ஏப்பிரல் 25 |
2022 | ஏப்பிரல் 10 | ஏப்பிரல் 17 |
2023 | ஏப்பிரல் 2 | ஏப்பிரல் 9 |
2024 | மார்ச்சு 24 | ஏப்பிரல் 28 |
2025 | ஏப்பிரல் 13 | |
2026 | மார்ச்சு 29 | ஏப்பிரல் 5 |
2027 | மார்ச்சு 21 | ஏப்பிரல் 25 |
2028 | ஏப்பிரல் 9 | |
2029 | மார்ச்சு 25 | ஏப்பிரல் 1 |
2030 | ஏப்பிரல் 14 | ஏப்பிரல் 21 |
2031 | ஏப்பிரல் 6 |
மேற்குத் திருச்சபையில் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் சபை, லூத்தரன் சபை ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.
கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு முன்னால் எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி நற்செய்தி நூலிலிருந்து பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். பின் குரு செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் சென்று தத்தம் இடத்தை அடைவர். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு எபிரேய மொழியில் "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.
குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.
கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.
இவ்வாண்டு (2011) மத்தேயு நற்செய்தி (மத் 21:1-11), 2012இல் மாற்கு நற்செய்தி (மாற் 11:1-10), 2013இல் லூக்கா நற்செய்தி (லூக் 19:28-40) என்று முதல் மூன்று நற்செய்தி நூல்களிலிருந்தும் மூவாண்டு சுழற்சி முறையில் இயேசு எருசலேமுக்கு பவனியாகச் சென்ற நிகழ்ச்சி பறைசாற்றப்படும்.
“ | இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார். "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக்கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்ற போது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று பதிலளித்தனர். | ” |
கிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.
யோர்தானிலும் இசுரயேலிலும் கத்தோலிக்க திருச்சபை, மரபுவழித் திருச்சபை, கீழைச் சபை, ஆங்கிலிக்கன் சபை போன்ற கிறித்தவக் குழுக்களைச் சார்ந்த மக்கள் இந்நாள் வழிபாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள். சிறுவர்கள் தம் கைகளில் ஒலிவ மரக்கிளை, ஓலைக் குருத்து போன்றவற்றைத் தாங்கிச் செல்வர். அக்கிளைகளைச் சிலுவை வடிவில் மடிப்பது வழக்கம். ரோசாப் பூக்களால் சிலுவை செய்வதும் உண்டு. ஒலிவக் கிளையைத் திருநீரில் அமுக்கி அந்நீரைக் குரு மக்கள்மீது தெளிப்பார்.
ஓலைக் குருத்துகளுக்குப் பதிலாக "வில்லோ" (willow) மரக்கிளைகளை மக்கள் தாங்கி பவனியாகச் செல்வார்கள்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஓலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள். கோவிலின் உள்ளே தூயகப் பகுதியில் தரையில் செவ்வந்தி போன்ற பூக்களைத் தூவுவது கேரளத்தில் வழக்கம். சில இடங்களில் குருத்தோலைப் பவனி செல்லும் போது மக்கள் துணிகளை வழியில் விரிப்பதும் உண்டு.[6]
மால்ட்டா நாட்டில் ஒலிவக் கிளைகளும் பனைமரக் குருத்துகளும் பவனியில் செல்வோரின் கைகளில் இருக்கும். ஒலிவக் கிளைகளை இறந்த இயேசுவின் சிலைமீது விரிப்பார்கள். இயேசு ஒலிவத் தோட்டத்தில் துயருற்றார் என்பதை அது நினைவுபடுத்துகிறது.
இந்நாட்டின் சில பகுதிகளில் அப்பத்தைச் சிலுவை வடிவில் செய்வார்கள். அதுபோலவே சேவல் வடிவத்திலும் ஆக்குவார்கள் (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவிற்று (காண்க: மாற்கு 14:66-72).
செயற்கைக் குருத்தோலைகளைச் செய்து அவற்றுள் மிக நீண்ட ஓலைக்குப் பரிசு வழங்கும் பழக்கம் போலந்தில் உள்ளது. 2008இல் மிக நீண்ட குருத்தோலை 33.39 மீட்டர் இருந்ததாம்!
இந்நாடுகளில் குருத்து ஞாயிறு "மலர் ஞாயிறு" எனக் கொண்டாடப்படுகிறது. ரோசா, லில்லி, மார்கரட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களைத் தாங்கியவர்கள் அந்நாளை விழாநாளாகச் சிறப்பிப்பர்.
இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிக்கொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013 மார்ச்சு 13ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு) முதன்முறையாக குருத்து ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை என்னும் தகுதியில் தலைமை தாங்கினார்.
அப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.[7] அவை:
மேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜனேரோ நகரில் நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.