![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/%25E0%25AE%2590%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%259C%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D_%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D_1260.svg/langta-640px-%25E0%25AE%2590%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%259C%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D_%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D_1260.svg.png&w=640&q=50)
ஐன் ஜலுட் போர்
எகிப்திய அடிமை வம்சம் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கு இடையே கி. பி. 1260இல் நடைபெற்ற யுத்தம் / From Wikipedia, the free encyclopedia
ஐன் ஜலுட் போர் (Battle of Ain Jalut, அரபு மொழி: عين جالوت, "கோலியாத் ஊற்று", அல்லது கரோத் ஊற்று, எபிரேயம்: מעין חרוד) என்பது எகிப்தின் பகிரி அடிமை வம்சத்தவர் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கு இடையே தென்கிழக்கு கலிலேயாவிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கில் 3 செப்டம்பர் 1260ஆம் ஆண்டு நடைபெற்ற போர் ஆகும். இசுரேலிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கின் தற்போதைய அழிந்துபோன கிராமமான சிரினின் தளத்திற்கு அருகில் இது நடைபெற்றது. மங்கோலியப் படையெடுப்புகளின் நீட்சியாக இந்தப் போர் நடைபெற்றது. முதன் முறையாக ஒரு மங்கோலிய முன்னேற்றமானது போர்க்களத்தில் நடந்த நேரடியான சண்டையில் நிரந்தரமாக தோற்கடிக்கப்பட்டது இந்தப் போரில் தான்.[13][14][15]
ஐன் ஜலுட் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் சிரியா மீதான படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||||
![]() இரண்டு படைகளின் நகர்வைக் காட்டும் வரைபடம். இறுதியில் அவை ஐன் ஜலுட்டில் சந்தித்தன. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
![]() ![]() | ![]()
|
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
![]() ![]() ![]() | ![]() ![]() ![]() |
||||||||
படைப் பிரிவுகள் | |||||||||
இலகுரகக் குதிரைப்படை மற்றும் குதிரை வில்லாளர்கள், கனரகக் குதிரைப்படை, காலாட் படை | மங்கோலிய வாள்வீரர்கள் மற்றும் குதிரை வில்லாளர்கள்கள், சிசிலிய ஆர்மீனியத் துருப்புக்கள், சார்சியா படைப்பிரிவு, உள்ளூர் அய்யூப்பிய படைப்பிரிவுகள் | ||||||||
பலம் | |||||||||
15,000–20,000[2][3][4] | 10,000–20,000[5][6][7][8][9][10] | ||||||||
இழப்புகள் | |||||||||
தெரியவில்லை | பெரும்பாலான இராணுவம்[11][10][12] |
மங்கோலியப் பேரரசின் மேற்கு நோக்கிய விரிவாக்கத்தைத் தொடர்ந்த குலாகுவின் இராணுவங்கள், 1258ஆம் ஆண்டு பகுதாதுவைக் கைப்பற்றிச் சூறையாடின. சிறிது காலத்திற்குப் பிறகு, அய்யூப்பியத் தலைநகரானத் திமிஷ்குவையும் கைப்பற்றின.[16] எகிப்தைச் சரணடைய வைக்குமாறு குதூஸிற்குக் கோரிக்கை வைக்கக் கெய்ரோவிற்குத் தூதுவர்களைக் குலாகு அனுப்பினார். தூதுவர்களைக் கொன்ற குதூஸ் அவர்களது தலைகளைக் கெய்ரோவின் வாயிற்கதவான பாப் சுவேயிலாவில் காட்சிக்கு வைத்தார்.[16] இந்நிகழ்வுக்குச் சிறிது காலத்தில், மங்கோலியப் பாரம்பரியப்படித் தன்னுடைய இராணுவத்தின் பெரும்பகுதியுடன் மங்கோலியாவிற்குக் குலாகு திரும்பினார். தளபதி கித்புகாவின் தலைமையில் புறாத்து ஆற்றுக்கு மேற்குப் புறம் 10,000 துருப்புக்களை விட்டு விட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொண்ட குதூஸ் வேகமாகத் தன்னுடைய இராணுவத்தை கெய்ரோவில் இருந்து பாலத்தீனத்தை நோக்கிக் கூட்டிச் சென்றார்.[17] கித்புகா சிதோன் நகரத்தைச் சூறையாடினார். பிறகு தனது இராணுவத்தைத் தெற்கு நோக்கி அரோடு ஊற்றிற்கு குதூஸின் படைகளைச் சந்திப்பதற்காகக் கூட்டி வந்தார். கொரில்லாத் தாக்குதல்கள் மற்றும் தோற்று ஓடுவது போல் நடிப்பது ஆகிய நடவடிக்கைகளை மம்லூக் தளபதி பைபர்சு மேற்கொண்டார். இறுதியாகக் கித்புகாவின் இராணுவத்தைக் குதூஸ் சுற்றி வளைத்தார். பிசான் நகரை நோக்கிப் பின்வாங்குமாறு மங்கோலிய இராணுவமானது கட்டாயப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு மம்லூக்குகள் கடைசித் தாக்குதலை நடத்தினர். இதன் முடிவில் ஏராளமான மங்கோலியத் துருப்புகள் இறந்தனர். கித்புகா கைது செய்யப்பட்டார்.
மங்கோலியர்கள் தங்களது எல்லையை விரிவுபடுத்தும் நிகழ்வானது நிரந்தரமாகத் தடுக்கப்பட்டது முதல் முறையாக இந்தப் போரில் தான் எனக் கருதப்படுகிறது.[13] மேலும், தவறாக, முதல் பெரிய மங்கோலியத் தோல்வி எனவும் இந்தப் போர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.[17] எகிப்து மற்றும் லெவண்ட் மீதான படையெடுப்பு முயற்சிகளின் போது மங்கோலியர்கள் அடைந்த இரண்டு தோல்விகளில் முதல் தோல்வியாக இது அமைந்தது. மற்றொரு தோல்வி 1303ஆம் ஆண்டு மர்ஜ் அல் சபர் போரில் அடைந்த தோல்வியாகும். எந்த ஒரு இராணுவச் சண்டையிலும் கைப்பீரங்கி முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டதாகப் பதியப்பட்டது இந்த போரில் தான். அதை மம்லூக்குகள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் மங்கோலிய இராணுவத்தைப் பயமுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர் என 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டு அரபி இராணுவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[18][19][20][21][22]