ஐக்கிய நாடுகள் அவை
பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் (United Nations, UN, ஐநா) என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.[2] இது உலகின் மிகப்பெரியது பன்னாட்டு அமைப்பாகும்.[3] இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள பன்னாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனீவா, நைரோபி, வியென்னா, டென் ஹாக் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் இருந்து மதிப்பிடப்பட்ட மற்றும் தன்னார்வப் பங்களிப்புகளால் நிதியளிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் United Nations
| |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தலைமையகம் | 760 ஐக்கிய நாடுகள் பிளாசா, மன்ஹாட்டன், நியூயார்க்கு நகரம் (பன்னாட்டுப் பிராந்தியம்) | ||||||||||
அதிகாரபூர்வ மொழிகள் | |||||||||||
வகை | அரசுகளுக்கிடையேயான அமைப்பு | ||||||||||
அங்கத்துவம் | 193 உறுப்பு நாடுகள் 2 பார்வையாளர் நாடுகள் | ||||||||||
தலைவர்கள் | |||||||||||
அந்தோனியோ குத்தேரசு | |||||||||||
• துணைப் பொதுச் செயலாளர் | அமீனா ஜெ. முகம்மது | ||||||||||
அப்துல்லா சாகிது | |||||||||||
• பொருளாதார, சமூகப் பேரவைத் தலைவர் | கொலென் விக்சன் கெலாப்பிலி | ||||||||||
நிறுவுதல் | |||||||||||
• ஐநா பட்டயம் கைச்சாத்து | 26 சூன் 1945 (79 ஆண்டுகள் முன்னர்) (1945-06-26) | ||||||||||
• பட்டயம் நடைமுறையில் | 24 அக்டோபர் 1945 (78 ஆண்டுகள் முன்னர்) (1945-10-24) | ||||||||||
|
ஐநா அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த பன்னாட்டு அமைப்பான உலக நாடுகள் சங்கம் பயனற்றது என்று வகைப்படுத்தப்பட்டு கலைக்கப்பட்டது.[4] 1945 ஏப்ரல் 25 , 50 அரசுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாட்டிற்காகச் சந்தித்து, ஐக்கிய நாடுகளின் பட்டயத்தை உருவாக்கத் தொடங்கின, இது 1945 சூன் 25 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1945 அக்டோபர் 24 இல் நடைமுறைக்கு வந்தது. ஐநாவின் பட்டயத்தின்படி, அமைப்பின் நோக்கங்களில் பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், பன்னாட்டு சட்டத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை அடங்கும்.[5] இவ்வமைப்பு நிறுவப்பட்ட போது, இது 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது; 2011 இல் தெற்கு சூடானின் சேர்க்கையுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, இது உலகின் அனேகமாக அனைத்து இறையாண்மை நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[6]
உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் நோக்கம் அதன் ஆரம்ப தசாப்தங்களில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் அந்தந்த நட்பு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரால் சிக்கலானது. அதன் பணிகளில் முதன்மையாக நிராயுதபாணியான இராணுவப் பார்வையாளர்கள், இலேசான ஆயுதம் ஏந்திய துருப்புகள் ஆகியன முதன்மையாகக் கண்காணிப்பு, அறிக்கை தயாரித்தல், நம்பிக்கையை வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டிருந்தன.[7] 1960களில் தொடங்கிய பரவலான குடியேற்ற விலக்கத்தைத் தொடர்ந்து ஐநா உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது. அப்போதிருந்து, 80 முன்னாள் குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றுள்ளன, இதில் 11 ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள் அறக்கட்டளை பிரதேசங்கள் ஐநா அறங்காவலர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தன.[8] 1970களில், பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்டம், அமைதி காக்கும் பணிக்கான செலவினங்களை விட அதிகமாக இருந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐ.நா. தனது களச் செயல்பாடுகளை மாற்றியும், விரிவுபடுத்தியும், பல்வேறு சிக்கலான பணிகளை மேற்கொண்டது.[9]
ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபை; பாதுகாப்புப் பேரவை; பொருளாதார, சமூகப் பேரவை (ECOSOC); பொறுப்பாட்சி மன்றம்; அனைத்துலக நீதிமன்றம்; ஐக்கிய நாடுகள் செயலகம் ஆகிய ஆறு முக்கிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை விட உலக வங்கிக் குழுமம், உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனெசுக்கோ, சிறுவர் நிதியம் ஆகிய சில சிறப்பு நிறுவனங்கள், நிதி அமைப்புகள், திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது. அத்துடன், கூடுதலாக, அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ECOSOC மற்றும் பிற நிறுவனங்களுடன் ஐ.நா.வின் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.
ஐநாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுச் செயலாளர் ஆவார். தற்போதைய பொதுச் செயலாளராக போர்த்துகீசிய அரசியல்வாதியும் தூதருமான அந்தோனியோ குத்தேரசு பதவியில் உள்ளார். இவர் தனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தை 2017 சனவரி 1 தொடங்கினார், 20121 சூன் 8 அன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் அமைதிக்கான நோபல் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளன, இருப்பினும் அதன் செயல்திறன் பற்றிய பக்கசார்பற்ற மதிப்பீடுகள் கலவையாக உள்ளன. சிலர் இவ்வமைப்பு அமைதி மற்றும் மனித மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாக நம்புகிறார்கள், வேறு சிலர் இது பயனற்றது, பக்கச்சார்பானது அல்லது ஊழல் மிகுந்தது என்றும் கூறுகின்றனர்.[10]