எலிபண்டா குகைகள்
From Wikipedia, the free encyclopedia
எலிபண்டா குகைகள், மும்பை கடற்கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1] பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
எலிபண்டா குகைகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
20 அடி உயரமுள்ள மும்முகச் சிவன் சிற்பம் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | (i)(iii) |
உசாத்துணை | 244 rev |
UNESCO region | தெற்காசியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
இக் குகைகள் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் இராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
இக்குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. பாறைகளில் குகைகள் குடையப்பட்டுள்ளன.