இளம்பூரணர்
From Wikipedia, the free encyclopedia
இளம்பூரணர் (Ilampooranar) இடைக்காலத் தமிழ் மொழி உரையாசிரியராவார். இவர் இன்றுவரை தொல்காப்பியத்துக்குக் கிடைத்த உரைகளில் மிகப்பழைய உரையை எழுதியவர் ஆவார். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதினார்.
தொல்காப்பிய உரையாசிரியர்களில் இவர் காலத்தால் முந்தியவர். இவரது காலம் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டு.[1][2] ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லார் இவரைக் குறிப்பிடுவதால் இவரது பெயரை இளமையில் அறிவு நிறையப்பெற்ற துறவி என உணர்ந்துகொள்ள வேண்டும். ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர்’, ‘ஏதமில் மாதவர்’ என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார்.[3]
- இவர் சோழநாட்டினர்.[4]
- இவர் உழவர்.[5]
- இவர் சமணர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கருத்து.
இளம்பூரணருக்கு முன்பும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதப்பட்டிருந்தது என்பதனை "இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது" என அவர் குறிப்பிடுவதால் உணரலாம்.[6] அதிகார விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள், தெளிவுரை, சொல்தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும்.