இயேசு தோற்றம் மாறுதல்
From Wikipedia, the free encyclopedia
இயேசு தோற்றம் மாறுதல் (ஆங்கில மொழி: Transfiguration of Jesus) என்பது புதிய ஏற்பாட்டின்படி ஒரு மலையின்மீது இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய நிகழ்வினைக்குறிக்கும்.[1][2] ஒத்தமை நற்செய்தி நூல்கள் (மத்தேயு 17:1–9, மாற்கு 9:2-8, லூக்கா 9:28–36) மூன்றிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது (2 Peter 1:16–18)[1]
இவ்விவரிப்புகளின்படி இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின. அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசுவின் திருமுழுக்கின்போது நிகழ்ந்ததுபோலவே தந்தையாம் கடவுள் மேகத்தினின்று, ″இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்″ என்று கூறியதாக விவரிக்கப்பட்டுள்ளது.[1]
இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு நற்செய்திகளில் விவரிக்கப்படுள்ள இயேசுவின் புதுமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.[2][3][4] ஆயினும் இது இயேசுவிலேயே நிகழ்வதால் நற்செய்திகளின் பிற புதுமைகளைக்காட்டிலும் இது மாறுபட்டதாகும்.[5] தாமஸ் அக்குவைனஸ் இந்நிகழ்வை இயேசுவின் மிகப்பெரும் புதுமை என விவரித்துள்ளார். மேலும் அவர் இந்நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கின் நிறைவு என்றும் கிறித்தவ வாழ்வின் இலக்கான விண்ணகத்தின் முழுமையான எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.[6] இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வும் அவருடைய திருமுழுக்கு, சாவு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் ஆகியவற்றொடு சேர்த்து அவரின் இவ்வுலக வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.[7][8]
கிறித்தவ இறையியலின்படி இந்நிகழ்வு இயேசுவின் இறைத்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும், மனிதத்தையும் இறைவனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் நம்பப்படுகின்றது.[9]