ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர், அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர். / From Wikipedia, the free encyclopedia
ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
11ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் | |||||||
பதவியில் 25 சூலை 2002 – 25 சூலை 2007 | |||||||
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் மன்மோகன் சிங் | ||||||
Vice President | கிருஷண் காந்த் பைரோன் சிங் செகாவத் | ||||||
முன்னையவர் | கே. ஆர். நாராயணன் | ||||||
பின்னவர் | பிரதிபா பாட்டீல் | ||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||
பிறப்பு | ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (1931-10-15)15 அக்டோபர் 1931 இராமேசுவரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா) | ||||||
இறப்பு | 27 சூலை 2015(2015-07-27) (அகவை 83) சில்லாங், மேகாலயா, இந்தியா | ||||||
இளைப்பாறுமிடம் | அப்துல் கலாம் தேசிய நினைவகம் | ||||||
தேசியம் | இந்தியர் | ||||||
துணைவர் | திருமணம் புரியவில்லை | ||||||
முன்னாள் கல்லூரி | தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி சென்னை தொழில்நுட்ப நிறுவனம் | ||||||
தொழில் | வான்வெளிப் பொறியாளர் | ||||||
விருதுகள் | பத்ம பூசன் (1981) பத்ம விபூசன் (1990) பாரத் ரத்னா (1997) ஊவர் பதக்கம் (2009) | ||||||
எழுதிய நூல்(கள்) | அக்னிச் சிறகுகள் இந்தியா 2020 | ||||||
கையெழுத்து | |||||||
இணையத்தளம் | abdulkalam.com | ||||||
| |||||||
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.
2002 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதான எதிர்க் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளின் ஆதரவுடன், இலட்சுமி சாகலை தோற்கடித்து, இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் சனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.
இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.