From Wikipedia, the free encyclopedia
அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan, பிறப்பு: செப்டம்பர் 10, 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.
அனந்தி சசிதரன் Ananthi Sasitharan | |
---|---|
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 24 அக்டோபர் 2018 | |
இலங்கை, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு அமைச்சர் | |
பதவியில் ஜூன்.29. 2018 – 24 அக்டோபர் 2018 | |
முன்னையவர் | க. வி. விக்னேஸ்வரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 10, 1971 |
குடியுரிமை | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்(2018 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கைத் தமிழரசுக் கட்சி (2018 வரை) |
துணைவர் | வேலாயுதம் சசிதரன் (எழிலன்) |
தொழில் | ஆசிரியை |
ஆசிரியையான அனந்தி[1] தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார்.[2][3] எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது[4][5] ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார்.[6][7] ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்.[8][9]
அனந்தி 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87,870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[10][11] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14] அனந்திக்கு 1வது வட மாகாண சபையில் சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி வழங்கப்பட்டுள்ளது[15]
2018 அக்டோபர் 21 இல் இவர், தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்.[16][17]
தேர்தல் பரப்புரைக் காலத்தில் இவருக்கு எதிராகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2013 செப்டம்பர் 11 இல் சுன்னாகத்திற்கு அருகில் இவர் பயணம் செய்த வாகனம் தாக்குதலுக்குள்ளானது.[18][19] 2013 செப்டம்பர் 19 இல் அனந்தியின் சுழிபுரம் இல்லத்தைச் சூழ்ந்து கொண்ட இராணுவ உடை தரித்த சுமார் 70 ஆயுதக்கும்பல் அவரது இல்லத்தை சேதப்படுத்தி, அவரது ஆதரவாளர்கள் பலரைத் தாக்கிக் காயப்படுத்தினர். இத்தாக்குதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் காயமடைந்தார்.[20][21][22]
தற்போது அனந்தி சசிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளராக இணைந்து பணியாற்றி வருகிறார்.[23]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.