அந்தமானியப் பழங்குடிகள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
அந்தமானியப் பழங்குடிகள் (Andamanese people) வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்தியாவின் அந்தமான் தீவுகளில் காலம் காலமாக வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பற்ற மக்கள் ஆவர்.[1] ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய குள்ளமான அந்தமானியப் பழங்குடிகள் தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.[2] அந்தமானியப் பழங்குடி மக்கள் கூட்டாக வாழும் இயல்பினர். உணவிற்கு மீன்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனிகளை பறித்தும், கிழங்கு மற்றும் அரிய வேர்களையும் தோண்டித் தின்பர்.
18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்தமானியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 7,000 எனக் கணக்கிட்டுள்ளனர். மானிடவியலாளர்கள், அந்தமானியப் பழங்குடி மக்களை அவர்களின் வேறுபட்ட பண்பாடு, நாகரீகம், அணியும் சின்னங்கள், பேசும் மொழிகளை வைத்து ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெரிய அந்தமானியப் பழங்குடி மக்கள் ஆவர். நோய்த் தொற்று காரணமாக இவர்களின் மக்கள் தொகை குன்றி, தற்போது 400 முதல் 500 பேர் மட்டுமே உள்ளனர்.
அந்தமானியப் பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் பிரிவில் சேர்த்துள்ளனர்.[3]