சைவ சமய உரை From Wikipedia, the free encyclopedia
அக்சமாலிகா உபநிடதம் (Akshamalika Upanishad) ( சமக்கிருதம்: अक्षमालिका उपनिषद् ) என்பது சமசுகிருதத்துல் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இருக்கு வேதத்துடன் தொடர்புடைய [1] இது 14 சைவ (சிவன் தொடர்பான) உபநிடதங்களில் ஒன்றாகும்.[1]
உபநிடதம் அக்சமாலை (பிரார்த்தனை மாலை) பற்றியும் பிரார்த்தனையில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் விவரிக்கிறது.[2] உரை பல்வேறு வகையான பிரார்த்தனை மாலைகள், அவற்றின் முக்கியத்துவம், தொடர்புடைய மந்திரங்கள் மற்றும் குறியீட்டைக் குறிப்பிடுகிறது. [3] மாலையின் உட்புறமுள்ள கயிறு இறுதி யதார்த்தத்தைக் குறிக்கிறது ( பிரம்மம் - ஆன்மா ), அதன் வலதுபுறத்தில் உள்ள வெள்ளியிலான கயிறு சிவனைக் குறிக்கிறது. இடதுபுறத்தில் உள்ள செப்புக் கயிறு விஷ்ணுவையும், முகம் சரசுவதியையும், கீழேயுள்ளது காயத்ரியையும் குறிக்கிறது. ஒவ்வொரு மணியின் துளையும் ஞானத்தை நினைவூட்டுகிறது, மேலும் முடிச்சு பிரகிருதி (இயற்கை) ஆகும். [3][4]
கிளாஸ் குளோஸ்டர்மேயர் இந்த உரையை பஸ்மஜபால உபநிடதம், உருத்ராட்சஜபால உபநிடதம், பிருகஜபால உபநிடதம் மற்றும் காலாக்னி ருத்ர உபநிடதம் ஆகியவற்றுடன் சைவ மதத்தில் உள்ள சடங்குகள் மற்றும் வழிபாட்டு பொருள்களின் அடையாளத்தை விளக்கும் சைவ நூல்களாக வகைப்படுத்துகிறார். [2] இந்த சைவ உபநிடத உரை அர்ப்பணிப்பு மற்றும் தியானத்திற்காக ஜெபமாலையைப் பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கிறது. மற்ற மரபுகளில் ஜெபமாலை பயன்படுத்துவது பொதுவானது.[5][6]
இது அக்சமாலிகோபநிஷத் என்றும் அழைக்கப்படுகிறது.[7]
அக்சமாலா என்பது மணிகளால் ஆன ஒரு சரத்தைக் குறிக்கிறது, அங்கு ஒவ்வொரு மணியும் எழுத்துக்களின் 50 எழுத்துக்களைக் குறிக்கிறது, a (अ) முதல் க்ச (क्ष) வரை, எனவே இது அக்சமாலிகா உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. [8] சைன மற்றும் இந்து நூல்களில் அக்சமாலா, அக்சமாலிகா, அக்சசூத்திரம், உருத்ராட்சமாலா, சர்சகமலா மற்றும் ஜபமாலை ஆகியனவற்றை ஜெபமாலைகளுக்கான மாற்றுப் பெயர்களாக எர்ன்ஸ்ட் லியூமன் கூறுகிறார்.[9]
இந்த உரையை உருவாக்கிய தேதி மற்றும் ஆசிரியர் தெரியவில்லை. பெரும்பாலான குறுங்குழுவாத உபநிடதங்களைப் போலவே, இந்த உரை இடைக்காலத்தின் பிற்பகுதியில், 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கால உபநிடதமாக இருக்கலாம். மேலும் இது 17 ஆம் நூற்றாண்டின் முகலாய இளவரசனான தாரா சிகோவால் வெளியிடப்பட்ட 50 முக்கியமான உபநிடதங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட 52 உபநிடதங்களில் ஒரு பகுதியாகவோ இல்லை. கோல்ப்ரூக்கால் வெளியிடப்பட்ட வட இந்தியாவில் பிரபலமான உபநிடதங்கள் அல்லது நாராயணாவின் தென்னிந்தியாவில் பிரபலமான உபநிடதங்களின் பிப்லியோதேகா இண்டிகா தொகுப்பிலும் இதன் பெயர் காணப்படவில்லை.[10]
நவீன யுகத்தில் உள்ள 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பான முக்திகாவில் இரமான அனுமனுக்கு விவரிக்கப்பட்தாகக் கூறப்படுகிறது. இது வரிசை எண் 67 இல் பட்டியலிடப்பட்டுள்ளது [11]
உரை பிரஜாபதி மற்றும் குகன் ( கார்த்திகேயன், போர்க் கடவுள்) ஆகிய இருவருக்குமிடையான ஒரு சொற்பொழிவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் விதிகள், வகைகள், வண்ணங்கள், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், நூல்கள் உட்பட பிரார்த்தனை மாலையைப் பற்றி பிரஜாபதி குகனிடம் கேட்கிறார்.[12]
பவளம் அல்லது மாணிக்கங்கள் , முத்துக்கள், பளிங்கு அல்லது படிகங்கள், சங்கு , வெள்ளி அல்லது துளசி , தங்கம், சந்தனம், வெள்ளால் மரம் , தாமரைகள் மற்றும் உருத்ராட்சங்கள் போன்ற 10 பொருட்களால் ஜெபமாலை உருவாக்கப்படலாம் என்று குகன் பதிலளிக்கிறார். வெள்ளி மற்றும் செம்பு நூல்கள் இருபுறமும் பயன்படுத்தப்படுகிறது என உரை கூறுகிறது. இது சமஸ்கிருத எழுத்துக்களோடு தொடர்புடைய ஐம்பது மணிகளைக் கொண்டிருக்க வேண்டும். மணிகள் வட்ட வடிவமாக அணியப்பட வேண்டும், மணிகளின் "முகம்" மற்றொரு மணியின் முகத்தைத் தொட வேண்டும் மற்றும் மணிகளின் தளங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.[12][3]
தங்கத்தால் செய்யப்பட்ட உட்புற நூல் பிரம்மத்தைக் குறிக்கிறது. வலதுபக்க வெள்ளி நூல் மற்றும் இடதுபுறத்தில் உள்ள செம்பு நூல் முறையே சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய கடவுள்களைக் குறிக்கிறது. மணிகளின் முகம் மற்றும் அடிப்பகுதி சரஸ்வதி மற்றும் காயத்ரி தெய்வங்களைக் குறிக்கிறது. துளைகள் அறிவு மற்றும் நூலின் முடிச்சு பிரகிருதி (இயற்கை). உயிரெழுத்துகள், ஊமை மெய் எழுத்துக்கள் மற்றும் பிற மெய் எழுத்துக்களைக் குறிக்கும் மணிகள் முறையே வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும், மேலும் அவை முறையே சத்வம், தாமசம் மற்றும் இராட்சதம் ஆகிய முக்குணங்களைக் குறிக்கிறது.[12][3]
108 மணிகள் கொண்ட அக்சமாலையின் பயன்பாடு சைவ மரபுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் வைணவம் போன்ற பிற இந்து மரபுகளிலும், பௌத்தர்களிடையேயும் காணப்படுகிறது.[13][14] பிரதிஷ்டை மற்றும் மந்திரங்களுடன் அர்ச்சனை செய்யும் முறை இந்த எல்லா மரபுகளிலும் ஒத்திருக்கிறது.[14]
இயேசு சபையினர் மற்றும் உரோமன் கத்தோலிக்க துறவிகள் மத்தியில் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக ஜெபமாலை பயன்படுத்தியதன் தோற்றம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கை பெக் கூறுகிறார்.[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.