1986 தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மண்ணுக்குள் வைரம் (Mannukkul Vairam ) என்பது மனோஜ் குமார் இயக்கிய 1986 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, ராஜேஷ், முரளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசையை, தேவேந்திரன் மேற்கொண்டார்.[1]
மண்ணுக்குள் வைரம் | |
---|---|
இயக்கம் | மனோஜ் குமார் |
தயாரிப்பு | கோவைத்தம்பி |
திரைக்கதை | மனோஜ் குமார் |
இசை | தேவேந்திரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா ராஜேஷ் முரளி |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
கலையகம் | மதர்லேண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 12, 1986 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிட்டு ( இரஞ்சனி ) தனது பாட்டி ஊரில் பாட்டியால் வளர்க்கப்பட்ட பின்னர் தனது சொந்த ஊரான மேட்டுப்பட்டிக்கு திரும்புகிறார். பெரியவர் ( சிவாஜி கணேசன் ) என்று அழைக்கப்படும் அண்ணன் தவசி, மற்றும் சின்னவர் ( வினு சக்ரவர்த்தி ) என்று அழைக்கப்படும் விருமாண்டி ஆகியோர் ஊரில் மிகவும் செல்வாக்குவாய்ந்த பணக்காரர்கள். பெரியவர் எல்லோரும் சமம் என்று கருதுகிறார். மேலும் கிராமத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார். அதே நேரத்தில் சின்னவர் சுயசாதி பெருமை கொண்டவராக உள்ளார். பெரியவருக்கு மிகச் சிறிய பேரக்குழந்தை உண்டு. பெரியவரின் மகளான சின்னாதாயி, சிறுவயதிலேயே திருமணமாகி விதவையாகிவிட்டார். சிட்டுவின் பெற்றோர்களான வேலப்பா ( ராஜேஷ் ) மற்றும் வெள்ளையம்மா ( சுஜாதா ) ஆகியோர் ஊரில் துணிகளை சலவை செய்யும் வேலை செய்கிறார்கள். சிட்டு தனது பாட்டியால் அதிக சுதந்திரத்துடன் வளர்க்கப்பட்டவள். ஆனால் சொந்த ஊரின் கடும் சாதி கட்டுபாட்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிரமப்படுகிறாள். சின்னவரின் மகனும் தனது வகுப்புத் தோழனான மயில்சாமி ( முரளி ) உடன் மோதிக் கொள்கிறாள். அவன் தனது சாதியின் காரணமாக அவளை தொடர்ந்து கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறான். சிட்டு கடைசியில் நீதி கேட்டு பஞ்சயத்தை கூட்ட பெரியவர் மயில்சாமியை தண்டிக்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மயில்சாமி தனது பிழைகளை உணர்ந்து விரைவில் சிட்டுவைக் காதலிக்கிறான். அதே நேரத்தில் பெரியவர் வேலப்பாவின் குடும்பத்துடன் சிட்டு நெருக்கமாகிறாள். சிட்டுவின் ஆணவத்தால் சின்னவர் கோபப்படுகிறார். பெரியவர் வெளியில் சென்றிருக்கும்போது ஊரில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களின் போது வேலவப்பாவை சில வேலைகளைச் செய்ய சின்னாவரும், ஊர் மருத்துவரும் இன்னும் சிலரும் கட்டாயப்படுத்துகிறார்கள். வேலப்பா வேலையில் ஈடுபடும் போது ஏற்பட்ட விபத்தால் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கபடுகிறார். சிட்டு மருத்துவரிடம் உதவி கேட்கிறார், ஆனால் அவரும் சின்னாவரும் உதவ மறுக்கிறார்கள். வேலப்பா வேதனையுடன் இறந்துவிடுகிறார். கோபத்தில், சிட்டு சின்னாவர் மற்றும் அவரது நண்பர்களின் கொடுமையை எதிர்த்து கூக்குரலிடுகிறாள். இதனால் சின்னவர் சிட்டுவையும், வெல்லம்மாவையும் ஊரைவிட்டு விரட்டுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சிட்டு மருத்துவராகி தன் தாயுடன் ஊருக்குத் திரும்புகிறார். ஊர்வாசிகள் சிலர் கணிசமாக மாறிவிட்டனர், இருப்பினும் சில விஷயங்கள் இன்னும் அப்படியே மாறாமல் உள்ளன. சின்னவாரின் வெறுப்பையும், அவரின் ஆட்களினால் ஏற்படுத்தும் தொந்தரவுகளையும் சிட்டு எதிர்கொள்ள வேண்டிவருகிறது.
இந்த படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்குநராக அறிமுகமானார். மனோஜ்குமார் சொன்ன கதையில் தயாரிப்பாளர் கோவைத்தாம்பி ஈர்க்கப்பட்டார். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி கணேசனிடம் அவர் உடனடியாக கதையை விவரித்தார்.[2]
படத்திற்கு தேவேந்திரன் இசையமைத்தார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.