1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1983 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1983 சூன் 9 முதல் சூன் 25 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகியவற்றுடன் முதற்தடவையாக சிம்பாப்வே அணியும் கலந்துகொண்டது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | இங்கிலாந்து |
வாகையாளர் | இந்தியா (1-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 27 |
வருகைப்பதிவு | 2,32,081 (8,596 per match) |
அதிக ஓட்டங்கள் | டேவிட் கவர் (384) |
அதிக வீழ்த்தல்கள் | ரொஜர் பினி (18) |
← 1979 1987 → |