வங்காள வரலாறு
வரலாற்றின் அம்சம் / From Wikipedia, the free encyclopedia
வங்காள வரலாறு (History of Bengal) என்பது வங்காள மொழி பேசும், தற்கால கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் உள்ளிட்ட வங்காளப் பகுதியின் வரலாறுகளை குறிக்கும். வங்காளத்தின் நாகரீகம் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.[1] தாலமியின் (கி பி 90 – 168), குறிப்புகளின் படி, கங்காரிதாய் இராச்சியம், கங்கை ஆற்றின் நீர் ஐந்து முகத்துவாரங்கள் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்குமிடமான தற்கால சிட்டகாங் கடற்கரையை ஒட்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பிற வரலாற்று ஆசிரியர்கள், தற்கால மேற்கு வங்காளத்தில், கங்கை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்தில் இருந்ததாக கூறுகின்றனர். [2] இந்து சமயம் மற்றும் பௌத்த சமயம் வங்காளத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.
தென்கிழக்கு ஆசியா, பாரசீகம், அரேபியா மற்றும் மத்தியதரைக் கடல் நாடுகளான அனதோலியா, பண்டைய கிரேக்கம், உரோமானிய நாடுகளுடன், வங்காளம் மஸ்லின் துணி வணிகம் மேற்கொண்டிருந்தது. [3] மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் கீழ் வங்காளம் ஒரு மாகாணமாக விளங்கியது.
கௌடப் பேரரசு (கிபி 590 – 626), பாலப் பேரரசு (கிபி 8 - 12ம் நூற்றாண்டு), காம்போஜ பால வம்சம் (கிபி 10 - 11ம் நூற்றாண்டு), ஹரிகேள இராச்சியம் (கிபி 10 - 11ம் நூற்றாண்டு), சென் பேரரசு (கிபி 1070– 1230), தேவா பேரரசு (கிபி 12 - 13ம் நூற்றாண்டு) வங்காளத்தை ஆண்ட காலத்தில், வங்காள மொழி, வங்காள எழுத்துமுறை, இலக்கியம், இசை, கலை மற்றும் கட்டிடக்கலை வளர்ந்தது.
13ம் நூற்றாண்டு முதல் வங்காளத்தின் நிலப்பரப்புகள் இசுலாமிய சுல்தான்கள், இந்து மன்னர்கள் மற்றும் பெருநிலக்கிழார்களின் கீழ் சென்றது.[4] வரலாற்றின் மத்திய காலத்திலும், நவீன காலத்திலும் வங்காளம், குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது.
கிபி 16 - 17ம் நூற்றாண்டுகளில் வங்காளத்தின் கழிமுகத்துவாரப் பகுதிகளை, 12 இராஜபுத்திர இசுலாமிய நிழக்கிழார்கள் ஆண்டனர்.[5]
வங்காளம், முகலாயர் ஆட்சியில் இருந்த போது, அரசு கருவூலத்தின் 50% நிலவரி வங்காள மாகாணத்திலிருந்து கிடைத்தது.[6] வங்காளத்தில் நெல், கரும்பு, மஸ்லின் துணி, சணல் நூல் மற்றும் சணல் பொருட்கள் மற்றும் கப்பல் கட்டும் தொழில்கள் சிறப்பாக நடைபெற்றது.[7][8][9] வங்காளத்தின் தலைநகரம் டாக்கா, பத்து இலட்சம் மக்கள்தொகைக்கு மேல் கொண்டிருந்தது. [6]முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், வங்காளம், படிப்படியாக, இசுலாமிய வங்காள நவாபுகளின் பிடியில் சென்றது. பின்னர் மராத்தியப் பேரரசினர் வங்காள நவாபுகளிடமிருந்து, வங்காளத்தின் மேற்கு பகுதிகளையும், தெற்கு பகுதிகளையும் கைப்பற்றினர்.
கிபி 18ம் நூற்றாண்டில், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிப் படைகளுக்கும், வங்காள நவாபு படைகளுக்கும் இடையே நடைபெற்ற பக்சார் சண்டை மற்றும் பிளாசி சண்டைகளின் முடிவில், கிபி 1793ல் வங்காளத்தின் பெரும்பகுதிகளைப் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றினர். கொல்கத்தா நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. வங்காளத்தில் பருத்தி மற்றும் பட்டுத் துணி ஆலைகள் மற்றும் சணல் ஆலைகள் பெருகியதால், இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வேகம் கொண்டது.[7][8][9][10] ஜவுளித் துறையில் பிரித்தானியர்கள் கொண்டு வந்த நவீன நெசவாலைகளாலும்; மழையின்றி ஏற்பட்ட உணவுப் பஞ்சங்களாலும், பல இலட்ச வங்காள மக்கள் தங்களது பரம்பரை நெசவுத் தொழிலை இழந்ததுடன், பட்டினி கிடந்து இறந்தனர். [7][8][9]
பிரித்தானியர்கள் ஆட்சியில் வங்காளத்தில் கல்வி, அறிவியல், கலைகள் பெருகியது. ஆங்கிலம் கற்ற வங்காளிகள் நடுவில் இந்திய விடுதலை போராட்ட உணர்வு பெருகியது. 15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியப் பிரிவினையின் போது, வங்காளத்தின், இந்துக்கள் அதிகமுள்ள பகுதியான வங்காளத்தின் மேற்கு பகுதியான மேற்கு வங்காளத்தை இந்தியாவுடன் இணைத்தனர். இசுலாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கு வங்காளத்தைப் பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்து கிழக்கு பாகிஸ்தான் எனப்பெயரிட்டனர்.
1971ல் தனி நாடு கோரும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், இந்தியாவின் உதவியுடன், பாகிஸ்தானிடம் போராடி விடுதலைப் பெற்றது. கிழக்கு வங்காளம் எனும் கிழக்கு பாகிஸ்தானுக்கு வங்காளதேசம் எனப்பெயரிடப்பட்டது.