ராமசரிதமானஸ்
From Wikipedia, the free encyclopedia
இராமசரிதமானஸ் (Ramcharitmanas, श्रीरामचरितमानस, சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: ŚrīRāmacaritamānasa), என்பது அவதி மொழியில் இயற்றப்பட்ட ஒரு இதிகாசம். இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த துளசிதாசர் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. “இராமசரிதமானஸ்” என்பதற்கு இராமரின் செயல்களைத் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது இந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப்படுகிறது.[1]. இந்த நூல் “வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு”, “இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்”, “பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்”, “இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல்” என்று பெருமையாகக் கூறப்படுகிறது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/An_Ramlila_Actor_In_The_Role_of_Ravana.jpg/320px-An_Ramlila_Actor_In_The_Role_of_Ravana.jpg)
இராமசரிதமானஸ் என்கிற சமசுகிருத சரித்திரம் இராமாயணத்தின் கவிதை வர்ணனையாகக் கருதப்படுகிறது. இராமாயணம் என்பது ராமனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சரித்திரம். இராமன் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவர், அயோத்தியின் இளவரசர், இந்து மதத்தில் மஹா விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர். எனினும் இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறு ஆக்கமில்லை என்று துளசிதாசர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இராமசரிதமானஸ் சிவனின் இருதயத்தில் பதிந்த கதை, சிவனால் பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது என்றும், இதை தனது குருவான நரஅரிதாசரிடமிருந்து தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார். எனவே இந்த நூலைச் சிலர் துளசி கீர்த்தி ராமாயணம்(துளசிதாசரால் எழுதப்பட்ட ராமாயணம்) எனவும் கூறுவார்கள்.[3]
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.[4][5]
இராமசரிதமானஸ் நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் இராமரின் சரித்திரத்தை வட இந்தியாவில் உள்ள சாமானிய மக்கள் பாடவும் தியானிக்கவும் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசிதாசர் ஒரு மிகப் பெரிய சமஸ்க்ருத மொழிக் கவிஞராக இருப்பினும், இராமரின் சரித்திரம் சமஸ்க்ருத மொழி வல்லுநர்களை மட்டுமல்லாது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று கருதியுள்ளார். எனவே, அவர் இந்த நூலை வட இந்தியாவின் அவாதி பேச்சு வழக்கில் இயற்றியுள்ளார். இவ்வாறு அவர் இயற்றியதற்கு வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கவிஞர்கள் அப்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் சாராம்சம் சாமானிய மக்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார். இது பிற்காலத்தில், அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டுள்ளது. இந்த நூல், ராம்லீலா போன்ற நாடகங்களின் தோற்றத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.[6]
இந்த நூல் பக்தி இயக்கதைச் சேர்ந்த சகுணா பள்ளியால் [7][8] இந்தி இலக்கியத்தில் இயற்றப்பட்டதாகவும் சிலர் கூறுவார்கள்.[9][10][n 1]