பித்தநீர்க் கரடி
From Wikipedia, the free encyclopedia
பித்தநீர்க் கரடிகள் (ஆங்கிலம்: Bile bears அல்லது battery bears) என்பது அவற்றின் உடலில் சுரக்கும் பித்தநீரினை அறுவடை செய்வதற்காக மனிதர்களால் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் கரடிகள் ஆகும்.[1][2][3] கல்லீரலால் உற்பத்தி செய்யப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் செரிமான திரவமான இந்தப் பித்தநீரானது சில பாரம்பரிய ஆசிய மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக வேண்டி சீனா, தென் கொரியா, லாவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில்[4][5][6][7][8] பித்தத்திற்காக 12,000 கரடிகள் வளர்க்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[9] கரடிகளின் பித்தநீருக்கான தேவை மேற்கூறிய நாடுகளில் மட்டுமல்லாது மலேசியா,[10] ஜப்பான்[11] போன்ற சில நாடுகளிலும் காணப்படுகிறது.
பித்தநீருக்காக பொதுவாக வளர்க்கப்படும் கரடி இனம் ஆசியக் கறுப்புக் கரடி (Ursus thibetanus) ஆகும்.[12] கூடுதலாக சூரியக் கரடி (Helarctos malayanus), பழுப்புக் கரடி (Ursus arctos) உட்பட மற்ற அனைத்துக் கரடி இனங்களும் பித்தநீர் அறுவடைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அர்ஸோடியாக்ஸிகோலிக் அமிலத்தினைச் (UDCA) சுரக்காத காரணத்தால் இராட்சதப் பாண்டா இனக் கரடிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காகத் திகழ்கின்றன.[13][14][15] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தப்பட்ட விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் ஆசியக் கறுப்புக் கரடி, சூரிய கரடி ஆகிய இரண்டு இனங்களும் அருகிவிடும் ஆபாயமுள்ள அழிவாய்ப்பு இனம் என பட்டியலிடப்பட்டுள்ளன.[12][13] முன்பு பித்தநீருக்காக வேட்டையாடப்பட்டு வந்த இவ்வினங்கள் 1980-களில் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டதிலிருந்து தொழிற்முறைப் பண்ணைகளாக (factory farming) வளர்க்கப்படத் துவங்கின.[16]
கரடிகளின் பித்தநீரானது பல நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்யப்படுகிறது. ஏதோ ஒருவகையான அறுவை சிகிச்சை முறையும் அதன் பின்னர் செருகப்படும் வடிகுழாயும் இவ்வனைத்து நுட்பங்களுக்கும் பொதுவான ஒன்று. இவற்றில் கணிசமான அளவு கரடிகள் பிழைபட்ட அறுவை சிகிச்சை முறைகளாலும் அதோடு கூட கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தத்தினாலும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகள் காரணமாகவும் இறந்து விடுகின்றன.
வளர்க்கப்படும் பித்தநீர்க் கரடிகள் சிறிய கூண்டுகளில் தொடர்ந்து அடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக அவை பெரும்பாலும் நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் அமர்ந்த நிலையிலிருந்து திரும்பவும் இயலாது தடுக்கப்படுகின்றன. கூண்டுக்குள் அடைக்கப்பட்டு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இந்த வாழும் சூழ்நிலைகளிலும் இயல்புக்கு மாறான பிழைபட்ட வளர்ப்பு நிலைகளாலும் அழுத்தப்படும் இக்கரடிகள் உடற்காயங்கள், வலி, கடுமையான மன உளைச்சல், தசைச் சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கேடு நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றன. இவற்றில் பல கரடிகள் குட்டிகளாகப் பிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் வரை இந்த கடுமையான அவலநிலையில் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.[17]
உலகச் சந்தையில் கரடித் தயாரிப்புகளின் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் $2 பில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[18][19] பித்தநீருக்காகக் கரடிகளை வளர்க்கும் தொழிற்முறைப் பண்ணைச் செயற்பாடுகள் சீன மருத்துவர்கள் உட்பட பலராலும் கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றன.[20]