தொழிற்புரட்சி
From Wikipedia, the free encyclopedia
தொழிற்புரட்சி (Industrial Revolution) என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது.
தொழிற்புரட்சி மனித சமுதாயத்தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தொழிற் புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி, தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் கூடத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில்நுட்பக் கல்வி விரிவடைந்தது. பஞ்சு நூற்பாலைகளில் தொடங்கி மாந்தர்கள் கைகளால் செய்த பற்பல பணிகளை இயந்திரமயமாக்கி, பெரும் எண்ணிக்கையிலும், மலிவாகவும் பொருள்களைப் படைக்கப் புதுமுறைகள் உருவாக்கினார்கள். உற்பத்தித் துறை மட்டுமல்லாது அச்சுத்தொழில், வெகு மக்கள் தொடர்பு ஊடகங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் முதலான பல துறைகள் பெருகி சேவை என்பது தொழில் என்ற நிலைக்கு மாறியுள்ளது.