From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் டவுன் (மலாய்: Bandaraya Pulau Pinang; ஆங்கிலம்: George Town City; சீனம்: 喬治市; ஜாவி: جورج تاون) என்பது மலேசியா; பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும். இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் (King George III) நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானியக் குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.[2]
சின்னம் | |
ஆள்கூறுகள்: 5°24′52″N 100°19′45″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
பினாங்கு தீவு மாநகராட்சி | மாநகராட்சி |
நகரத் தோற்றம் | 11 ஆகஸ்டு 1786 |
நகரத் தகுதி | 1857 |
அரசு | |
• மேயர் | அந்தோனி ராஜேந்திரன் Anthony Rajendran |
பரப்பளவு | |
• நகரம் | 18.9 km2 (7.3 sq mi) |
• மாநகரம் | 2,563.15 km2 (989.64 sq mi) |
மக்கள்தொகை (2020)[1] | |
• நகரம் | 1,58,336 |
• அடர்த்தி | 8,378/km2 (21,700/sq mi) |
• பெருநகர் | 28,33,957 (2-ஆவது) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 100xx - 108xx; 111xx - 118xx |
தொலைபேசி எண்கள் | +6042 (தரைவழித் தொடர்பு) |
வாகனப் பதிவெண்கள் | P |
இணையதளம் | http://www.mbpp.gov.my/ |
இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மாநகரில் ஏறக்குறைய 708,127 பேர் வசிக்கிறார்கள். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஜார்ஜ் டவுன் மாநகரம் இரண்டாவது இடம் வகிக்கிறது.[3]
ஜார்ஜ் டவுன் மாநகரக் கூட்டம் (Greater Penang) என அழைக்கப்படும் பெருநகர் பகுதி அமைப்பில்; ஜார்ஜ் டவுன், பினாங்கு ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன.
இங்கு சுமார் 2,412,616 பேர் வசிக்கிறார்கள். இந்த பெருநகரப் பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும். இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (World Heritage Site).
ஜார்ஜ் டவுன் - மலாக்கா வரலாற்று நகரங்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாசாரம் |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 1223 |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2008 (32nd தொடர்) |
1770-களில், தூர கிழக்கு நாடுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி (East India Company); வணிகத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அக்கட்டத்தில் தீபகற்ப மலேசியாவிலும் வர்த்தக உறவுகளை உருவாக்க அந்த நிறுவனம், பிரித்தானிய அரசக் கடற்படைத் தலைவரான (British Royal Navy Captain) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரை கெடாவிற்கு அனுப்பி வைத்தது.
பினாங்கு ஒரு புதிய பிரித்தானியத் துறைமுகமாக அமைவதற்கு பொருத்தமானது என்று கண்டறிந்த பிரித்தானியர்கள், பினாங்கில் ஒரு தளத்தை நிறுவுவதற்கு திட்டம் வகுத்தார்கள். அந்த வகையில் கெடாவின் சுல்தான் முகரம் ஷாவிடம் (Sultan Mukarram Shah) ஒப்புதலைப் பெற பிரான்சிஸ் லைட்டை கெடாவிற்கு அனுப்பினார்கள்.
கெடா சுல்தானிடம் இருந்து பினாங்கைப் பெற்றுக் கொள்வதில் பிரான்சிஸ் லைட் வெற்றி பெற்றார். அதற்குப் பதிலாக, கெடா இராணுவத்திற்கு தற்காப்பு உதவியின் அடிப்படையில் பிரித்தானியர்கள் உதவுவார்கள் என்றும் உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி உதவி செய்யவில்லை.
பினாங்கு தீவு, தொடக்கத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1786, ஆகஸ்ட் 11-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பில் பிரான்சிஸ் லைட் பினாங்கில் காலடி வைத்த போது, அதற்கு ஐக்கிய இராச்சியத்தின், நான்காம் ஜார்ஜ் நினைவாக "வேல்ஸ் இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார்.
அந்த வகையில், ஜார்ஜ் டவுன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரால் 1 ஆகஸ்ட் 1786-இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் நகரின் வடக்கு கிழக்கு மூலையில் கார்ன்வாலிசு கோட்டை (Fort Cornwallis) கட்டப்பட்டது. பின்னர் அது வளர்ந்து வரும் ஒரு வணிக நகராக மாறியது.
சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிகளுடன் சேர்ந்து, ஜார்ஜ் டவுன் நிலப்பகுதி நீரிணை குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாற்றம் கண்டது. 1867-ஆம் ஆண்டில் பிரித்தானிய முடியாட்சியில் (British Crown Colony) ஒரு காலனியாக மாறியது.
இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது.
கடற்கரை சாலை, மலபார் சாலை, பிட் சாலை உருவாக்கப்பட்டன. வணிகக் கட்டிடங்கள் முளைத்தன. கடற்கரை சாலையின் தெற்கு பகுதியில் மொத்த விற்பனையாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த நகரம் ஓர் உலகப் பாரம்பரியத் தளம் என பட்டியலிடப்பட்டு உள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் கடற்கரை சாலையின் வடக்குப் பகுதியில் ஐரோப்பிய இறக்குமதி வணிகக் கடைகள் அமைந்தன.
2008 ஜூலை 7-ஆம் தேதி, ஜோர்ஜ் டவுன்; மலாக்கா நகரத்துடன் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டது.[4]
வரலாற்று இணைப்புகள் | காலம் |
---|---|
கெடா சுல்தானகம் | 1136–1786 |
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி | 1786–1867 |
நீரிணை குடியேற்றங்கள் | 1826–1941; 1945–1946 |
மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு | 1941–1945 |
மலாயா ஒன்றியம் | 1946–1948 |
மலாயா கூட்டமைப்பு | 1948–1963 |
மலேசியா | 1963–தற்போது |
1857-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன் மலாயா கூட்டமைப்பின் முதல் நகராட்சியானது. ஜனவரி 1957 1-ஆம் தேதி மாட்சிமை தங்கிய ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் அரசியார், ஜோர்ஜ் டவுனை மாநகராட்சியாக மாற்றினார்.
1965-ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர்த் தேர்தல்கள் நிறுத்தப்பட்டன. 1966-ஆம் ஆண்டு மாநகரச் சபை செயல்பாடுகள் பினாங்கு முதலமைச்சரின் அதிகாரத்தின் கீழ் மாற்றப்பட்டன.
1974-ஆம் ஆண்டில், ஓர் உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கபட்டு, 1976-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன், பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன், பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.
நாடாளுமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
பி.048 | கொடி மலை | சய்ரீல் ஜோகாரி | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | தஞ்சோங் | சாவ் கொன் யாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | ஜெலுத்தோங் | ஒய் சுவான் ஆன் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | புக்கிட் குளுகோர் | ராம் கர்பால் சிங் | ஜனநாயக செயல் கட்சி |
சட்டமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்
Parliament | சட்டமன்றம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
பி.048 | என்.22 | தஞ்சோங் பூங்ஙா | தே ஈ சியாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்.23 | தண்ணீர் மலை | லிம் குவான் எங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்24 | கெபுன் பூங்ஙா | சியா கா பெங் | மக்கள் நீதிக் கட்சி |
பி.048 | என்.25 | புலாவ் திக்குஸ் | யாப் சூ ஹ்யூ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.26 | பாடாங் கோத்தா | சாவ் கொன் யாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.27 | பெங்காலான் கோத்தா | லாவ் கெங் ஈ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.28 | கொம்தார் | தே லாய் ஹெங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.29 | டத்தோ கிராமாட் | ஜக்டீப் சிங் டியோ | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.30 | சுங்கை பினாங் | லிம் சியு கிம் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.31 | பத்து லாஞ்சாங் | லாவ் ஹெங் கியாங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.32 | சிரி டெலிமா | நேதாஜி ராயர் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.33 | ஆயர் ஈத்தாம் | வோங் அன் வாய் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.34 | பாயா தெருபோங் | யோ சுன் இன் | ஜனநாயக செயல் கட்சி |
துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தையும் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மூலமாக விமான நிலையத்தை 30 நிமிடங்களிள் அடையலாம்.
அத்துடன் இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[5]
17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[6]
1983-ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டப்படும் போது இங்கு ஒரு முன்னோடிச் சாலை உருவாக்கப் பட்டது. 1985-இல் சாலை கட்டுமானம் முடிவுற்றது. பின்னர், இந்தச் சாலை வடக்கு நோக்கி ஜெலுத்தோங் விரைவுச் சாலையாகவும்; தெற்கே பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலையாகவும் நீட்டிக்கப்பட்டது.
முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் சோங் யூ 24 நவம்பர் 2010-இல் காலமானார். அவர் இறந்த பிறகு, 2010 டிசம்பர் 7-ஆம் தேதி, பினாங்கு மாநில அரசாங்கம் அவரின் நினைவாக அந்த விரைவுச் சாலைக்கு துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை எனப் பெயரை மாற்றியது.[7]
பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜார்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இந்தப் பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப் பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), முன்பு பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுனிலிருந்து 14 கி.மீ. (8.7 மைல்) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935-இல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை அதன் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.
சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது ஜோர்ஜ் டவுன் மாநகரை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.
1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இணைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.
கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன. பின்னர் அவை 1970-இல் நிறுத்தப்பட்டன.
கொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.
லிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.
ஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும்.
தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.
1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.