சரபா
From Wikipedia, the free encyclopedia
சரபா அல்லது சரபம் என்பது ( கன்னடம்: ಶರಭ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாகவும் விவரிக்கப்படுகிறது.[1][2] சரபம் என்பது சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எட்டுக்கால் பறவை (எண்காற்புள்) ஆகும். தமிழ் இலக்கியங்களில் இது சிம்புள் எனவும் போற்றப்பட்டுள்ளது. நான்கு காலும் பறக்கும் இறகுகளும் கொண்டு கோயில் சிற்பங்களில் காணப்படும்.
திருமால் நரசிங்க உருவம் [3] தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.