ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு
கிமு 480 முதல் 404 ஏதென்சின் பொற்காலம் / From Wikipedia, the free encyclopedia
ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு (Fifth-century Athens) என்பது கிமு 480 முதல் 404 வரையிலான காலத்திய ஏதென்சின் கிரேக்க நகர அரசாகும். இக்காலமானது முன்பு ஏதென்சின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏதென்சின் அரசியல் மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாட்டு செழிப்பு ஆகியவை நன்கு வளர்ந்த காலம் ஆகும். கிரேக்கத்தின் மீதான பாரசீக படையெடுப்பு தோல்வியடைந்த பிறகு, டெலியன் கூட்டணி என அழைக்கப்படும் ஏதெனியன் தலைமையிலான நகர அரசுகளின் கூட்டணியானது, பாரசீகர் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிய கிரேக்க நகரங்களை சுதந்திரமாக வைத்திருப்பதற்காக பாரசீகர்களை எதிர்கொண்ட காலகட்டம் கிமு 478 இல் தொடங்கியது.
கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரசீகத்துடன் அமைதி ஏற்பட்ட பிறகு, சுதந்திர நகர அரசுகளுடன் ஏதென்சு சமத்துவ பாசாங்குகளை கைவிட்டு, டெலியன் கூட்டணியின் கருவூலத்தை டெலோசிலிருந்து ஏதென்சுக்கு மாற்றிய பின்னர் ஏதென்சு பேரரசாக மாறியது. அந்த கருவூலத்திலிருந்து ஏதெனியன் அக்ரோபோலிஸ் கட்டிடத்திற்கு தேவைப்பட்ட நிதி எடுக்கப்பட்டது. அதில் பாதியை பொது ஊதியத்தில் சேர்த்தது மேலும் கிரேக்க உலகில் மேலாதிக்க கடற்படை சக்தியாக ஏதென்சு தன் நிலையை தக்க வைத்துக் கொண்டது.
பேரரசின் நிதியானது, அதன் இராணுவ மேலாதிக்கம் மற்றும் அதன் அரசியல் நல்வாய்ப்புகள் போன்றவை அரசியல்வாதியும் பேச்சாளருமான பெரிக்கிளீசால் வழிநடத்தப்பட்டது. ஏதென்சு மேற்கத்திய பாரம்பரியத்தின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் நீடித்த கலாச்சார கலை ஆக்கங்களை உருவாக்கியது. நாடக ஆசிரியர்களான எசுக்கிலசு, சாஃபக்கிளீசு, யூரிப்பிடீசு ஆகிய அனைவரும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஏதென்சில் வாழ்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்கினர். வரலாற்றாசிரியர்களான எரோடோட்டசு, துசிடிடீஸ், மருத்துவர் இப்போக்கிரட்டீசு மற்றும் மெய்யியலாளர்கள் பிளேட்டோ, சாக்கிரட்டீசு ஆகியோரும் இக்காலத்தவரே. ஏதென்சின் புரவலர் தெய்வமான ஏதெனாவின் பெயரில், ஏதென்சு தன் பெயரைப் பெற்றது.