அகவன்கூடு
From Wikipedia, the free encyclopedia
விலங்குகளின் உடலின் உட்புறமாக அமைந்திருந்து, உடலிற்குத் தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட இழையங்களாலான ஒரு தொகுப்பே அகவன்கூடு எனப்படும். பொதுவாக இவை முதுகெலும்பிகளில் எலும்பு, குருத்தெலும்பு என்னும் இரு வகை இணைப்பிழையங்களாலான ஒரு வன்கூடாக இருக்கும். இவை கனிமங்களால் ஆக்கப்பட்ட இழையங்கள் ஆகும். இந்த அகவன்கூடானது உடலை மூடியிருக்கும் தோலிற்குக் கீழாகவோ அல்லது தோலின் பகுதியாகவோ, அல்லது உடலின் ஆழமான பகுதிகளிலோ அமைந்திருக்கும். தோலின் ஒரு பகுதியானது கனிமங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் பல் போன்ற வன்கூடாகத் திரிபடையும்.[1]
முளைய விருத்தியின்போது, இந்த இழையங்கள் முதுகுநாண் மற்றும் குருத்தெலும்பு அமைப்பாகக் காணப்படும். அநேகமான முதுகெலும்பி வகை விலங்குகளில், முதுகுநாணானது முள்ளந்தண்டு நிரலாகவும், குருத்தெலும்புகள் ஏனைய எலும்புகள், மற்றும் எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்புகளாகவும் விருத்தியடையும். சுறா, திருக்கை போன்றவற்றின் அகவன்கூடானது கல்சியம் ஏற்றப்பட்டு எலும்புகளாக மாற்றமடையாத, முழுமையாக குருத்தெலும்புகளாலான வன்கூடாகும்.[2]