தௌலதாபாத் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
தௌலதாபாத் கோட்டை (Daulatabad Fort) தேவகிரி அல்லது தியோகிரி என்று அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள தௌலதாபாத் கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கோட்டையாகும். இது யாதவ வம்சத்தின் தலைநகராக இருந்தது. (கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை) சிறிது காலத்திற்கு தில்லி சுல்தானகத்தின் தலைநகரமாகவும் (1327–1334), பின்னர் அகமதுநகர் சுல்தானகத்தின் இரண்டாம் தலைநகரமாகவும் (1499-1636) இருந்தது. [1] [2] [3] பொ.ச. ஆறாம் நூற்றாண்டில், தேவகிரி, மேற்கு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி செல்லும் பயண வழித்தடங்களில் இன்றைய அவுரங்காபாத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான மலைப்பாங்கான நகரமாக உருவெடுத்தது. [4] [5] [6] [7]
தௌலதாபாத் கோட்டை | |
---|---|
தேவகிரி, தியோகிரி | |
பொதுவான தகவல்கள் | |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 19.942724°N 75.213164°E / 19.942724; 75.213164 |
நிறைவுற்றது | 1600s |
கோட்டை ஆரம்பத்தில் 1187 ஆம் ஆண்டில் முதல் யாதவ மன்னன் ஐந்தாம் பில்லாமா என்பவரால் கட்டப்பட்டது. 1308 ஆம் ஆண்டில், இந்த நகரத்தை இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட வம்சமான கில்ஜி வம்சத்தைத்ச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன் கில்சி இணைத்துக் கொண்டார். 1327 ஆம் ஆண்டில், துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகம்மது பின் துக்ளக் இந்நகரத்தை "தௌலதாபாத்" என்று பெயர் மாற்றி, தனது ஏகாதிபத்திய தலைநகரை தில்லியில் இருந்து இந்நகரத்திற்கு மாற்றினார். தில்லியின் மக்கள் பெருமளவில் தௌலதாபாத்திற்கு குடியேறவும் உத்தரவிட்டார். இருப்பினும், முகம்மது பின் துக்ளக் 1334 இல் தனது முடிவை மாற்றி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரத்தை இங்கிருந்து மீண்டும் தில்லிக்கு மாற்றினார். [8]
1499 ஆம் ஆண்டில், இது அகமத்நகர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவர்கள் இதை தங்கள் இரண்டாம் தலைநகராகப் பயன்படுத்தினர். 1610 ஆம் ஆண்டில், கோட்டைக்கு அருகில், கட்கி என்று பெயரிடப்பட்ட புதிய நகரமான அவுரங்காபாத், எத்தியோப்பிய இராணுவத் தலைவர் மாலிக் அம்பர் என்பவரால் அகமத்நகர் சுல்தானகத்தின் தலைநகராக பணியாற்ற நிறுவப்பட்டது. அவர் இந்தியாவுக்கு அடிமையாக கொண்டு வரப்பட்டார். ஆனால் அகமத்நகர் சுல்தானகத்தின் பிரதமராக உயர்ந்தார். இக்கோட்டையில் தற்போதுள்ள பெரும்பாலான பகுதிகள் அகமத்நகர் சுல்தானகத்தின் கீழ் கட்டப்பட்டது.