From Wikipedia, the free encyclopedia
கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் (Georg Wilhelm Friedrich Hegel, கியார்கு வில்ஃகெல்ம் ஃபிரீடரிக்கு எகல், [ˈgeɔʁk ˈvɪlhɛlm ˈfʁiːdʁɪç ˈhegəl], ஆகத்து 27, 1770 – நவம்பர் 14, 1831) என்பவர் ஒரு புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார்.
மேற்கத்திய மெய்யியல் 19 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல் | |
---|---|
கியார்க் எகல் | |
பெயர் |
கியார்க் வில்ஃகெம் பிரீடரிக் எகல் |
பிறப்பு |
|
இறப்பு |
நவம்பர் 14, 1831 61) (பெர்லின், இடாய்ச்சுலாந்து) (அகவை |
கருத்துப் பரம்பரை |
இடாய்ச்சுலாந்திய கருத்தியம்; எகலியத்தின் நிறுவுனர் |
முதன்மைக் கருத்துக்கள் |
ஏரணம், வரலாற்றின் மெய்யியல், கலைநயம், சமயம், மீவியற்பியல், அறிவாய்வியல், அரசறிவியல், |
குறிப்பிடத்தக்க கருத்துக்கள் |
முழுமுதல் கருத்தியம்(Absolute idealism), டயலெக்டிக், அடியெழுச்சி(Sublation) |
ஏற்ற தாக்கங்கள் |
அரிசிட்டாட்டில், இராக்ளிட்டசு, அன்செல்ம், ரெனே டேக்கார்ட், யோஃகான் வுல்ஃவ்கங் ஃவான் கோத்தே, மாரூஃக் ஸ்பினோசா, ழான் ழாக் ரூசோ, யாக்கோப் பியோமெ, இம்மானுவேல் கண்ட், யோஃகான் ஃவிஃக்டெ, பிரீடரிக் ஃகோல்டெர்லின், செல்லிங் |
ஊட்டிய |
ஃவூயெர்பாக், குரோசே, கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்சு, பௌவெர், பிராட்லி, லெனின், லூக்காஃசு, ஐடெகர், சாத்ரே, பார்த், குங், ஃகாபர்மாசு, காடமர், மோல்ட்மன், கீர்க்கெகார்டு, சென்ட்டீல், மக்சு இசுரேனர், டெய்லர், அலெக்ஃச்சாந்திரெ கோய்ரெ, Kojève, லக்கான், டிலோசு, சிழ்செக், ஃபூக்குயாமா |
கையொப்பம் |
இவருடைய கொள்கைகள் இடாய்ச்சுலாந்து மெய்யியல் கருத்துகளிலும் மேற்குலகின் மெய்யியியல் கருத்துகளிலும் பெரும் செல்வாக்குப் பெற்று, இன்றும் மிக்க புகழுடன் விளங்குவன. இவருடைய கருத்துப்படி மாந்தர்களுடைய எண்ணம், கருத்து, பண்பாடு ஆகிய எந்தவொரு தன்மையையும் அறிந்து கொள்ள, கருத்துகள் எழுந்த வரலாற்றைத் துல்லியமாய் அறிதல் வேண்டும். இவருடைய செல்வாக்கினால், மேற்குலகில் மெய்யியல், கலை, சமயம் (மதம்), அறிவியல், அரசியல் முதலான பல துறைகளிலும் வரலாற்றுக் கண்ணோட்டம் மிகுந்தது. எகல், கருத்துகள் வரன் முறையில் அதிக நாட்டம் காட்டினார். இதன் அடிப்படையில் கருத்துகள் (நிகழ்வுகளும்) படிப்படியாய் எழுவதையும் அது “வளர்ச்சி” அடைவதையும், எதிர்-எதிர் கருத்துகள் எழுந்து (மோதி) விரிவான வளர்ச்சி அடைவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வகை விரிவான கருத்து மோதலினால் ஏற்படும் வளர்ச்சியை டயலெக்டிக் (dialectic) என்று மேற்குலகில் குறிக்கின்றனர்.
எகல் 1770 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் திகதி தென்மேற்கு இடாய்ச்சுலாந்தின் வூட்டம்பேர்க்கில் உள்ள டியூச்சே என்ற இடத்திலுள்ள இசுடுட்கார்ட்டு என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஏதென்சு புரட்சிக் காலத்தில் ஆத்திரேலியாவிலிருந்து வூட்டம்பேர்க் வந்த புரட்டஸ்தாந்து அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். எகலின் நெருங்கிய உறவினர்கள் அவரை வில்லெம் என்றே அழைத்தனர். இவரது தந்தை கியார்கு இலூடுவிக்கு ஒரு வரி அறவீட்டாளராக ஒரு சிறு தொழிலில் இருந்தார். இவரது தாயாரான மரியா மக்தலேனா இலூயிசா, வூட்டம்பேர்க்கின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவரின் மகளாவார். எகலின் 13ஆவது வயதில் அவரது தாயார் பித்த நீரால் ஏற்பட்ட காய்ச்சலால் உயிரிழந்தார். எகலையும் அவரின் தந்தையையும் இந்த நோய் தாக்கிய போதும் அவர்கள் உயிர்பிழைத்துக்கொண்டனர். எகலிற்கு கிறிசிட்டியானா இலூயிசி (1773–1832) என்ற ஒரு உடன்பிறந்தாளும் கியோர்கு இலுட்விக்கு (1776–1812) என்ற ஒரு உடன்பிறந்தானும் இருந்தனர்.
எகல் தனது 3 ஆவது வயதிலேயே ஒரு செருமானியப் பாடசாலைக்குச் சென்றார். அவர் இருவருடங்களின் பின்னர் இலத்தீன் பாடசாலைக்குச் செல்ல முன்பே அவரது தாயார் எகலுக்கு இலத்தீனியச் சொற்களைக் கற்பித்திருந்தார். எகல் தனது ஆரம்பக்கல்வியை இசுட்டுகார்ட்டு கல்விக் கூடத்தில் பெற்றுக்கொண்டார். எகல் 1779 - 1800 காலப்பகுதியில் அவரது சொந்தக் கருத்துகளை வளர்த்துக்கொண்டார். இக்காலத்தில் இவர் இம்மானுவேல் காந்து, பிஹ்டே ஆகியோரின் மெய்யியல்களைக் கற்றார். எகல் 1788 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் தியூபிஞ்சென் பல்கலைக்கழகத்தின் இறையியல் நிறுவனத்தில் சேர்ந்தார். தியூபிஞ்சென் பல்கலைக்கழகத்திற்கு வரும் பொழுது எகல் புத்தி நுட்பமும் ஊக்கமும் உள்ள மாணவனாக விளங்கினார். இலத்தீன், கிரேக்க மொழிகளில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. அவரது அறிவியல் அறிவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. எகல் 20 ஆவது வயதில் மெய்யியலில் முதுகலை கலைப் பட்டம் (M.A.) பெற்றார்.
ஐந்து ஆண்டுகள் அங்கு பயின்ற காலத்தில் கவி ஓல்டெர்லினின் தொடர்பையும் செல்லிங்கின் தொடர்பையும் பெற்றார். இதன் மூலம் இயற்கை பற்றிய மெய்யியல் (1797), அப்பாலைக் கருத்து முதல்வாத முறைமை (1800) ஆகிய செல்லிங்கின் நூல்களைக் கற்றார். அக்காலகட்டத்தில் எல்லோருக்கும் ஏற்பட்டது போல சிபினோஸாவின் (Spinoza) பாதிப்பு அவரிலும் ஏற்பட்டது. பிஹ்டே ஒழுக்கத்தின் ஊடாகத் தனது முழுமுதல் கோட்பாட்டை அணுகினார். செல்லிங் முழுமுதல் கோட்பாட்டை கலையின் ஊடாக அணுகினார். எகல் அதனை சமயத்தின் ஊடாக அணுகினார்.
எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட உள்ளத்தின் நிகழ்வியக்கம் (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ஏரணத்தின் அறிவியல் (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விவரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துகளையும் தொகுத்து மெய்யியல்களின் கலைக்களஞ்சியம் (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துகளை செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துகள் (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.
எகல் தனது கடைசி பத்து வருட காலகட்டத்தில் எந்தவொரு புதிய பதிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால் அவரால் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம் (இரண்டாம் பதிப்பு, 1827, மூன்றாம் பதிப்பு 1830) முழுவதுமாக திருத்தப்பட்டது.[1] அவருடைய அரசியல் தத்துவத்தில், கார்ல் இலூடுவிக்கு வான் ஆலரின் பிற்போக்குத்தன செயல்பாடுகளை அவர் விமர்சித்தார்,அதில் சட்டங்கள் தேவையில்லை என்று கூறுகிறது. ஏகல் தனது ஆரம்பத்தில் வாழ்நாளிலிலும் மற்றும் அவரது பேர்லின் காலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, மதம், அழகியல் மற்றும் மெய்யியலின் வரலாறு பற்றிய தத்துவங்கள் பற்றிய பல படைப்புகள் அவருடைய மாணவர்களின் விரிவுரை குறிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டன.
ஒரு சீர்த்திருத்த குருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவராக, எகலின் இறையியல் கருத்துகள் பல அவரது எழுத்துகளில் மற்றும் விரிவுரையில் பிரதிபலித்தன.[2] இயேசு கிறித்துவின் நபர் பற்றிய எகலின் எண்ணங்கள் அறிவொளியின் கோட்பாடுகளிலிருந்து வெளிப்பட்டன. அவரது இறப்புக்குப் பின் வெளியிடப்பட்ட மதத்தின் தத்துவம் என்ற நூலின் மீதான சொற்பொழிவுகள், பாகம் 3 எகல் கடவுளின் இருப்பு மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி ஆதாரங்கள் குறிப்பாக ஏகலின் ஆர்வத்தைக் காட்டியுள்ளது.[3] ஏகலின் மதக்கொள்கைப்படி "கடவுள் என்பவர் கருத்தியல் சார்ந்தது அல்ல, மாறாக ஒரு நித்தியமான கடவுள் என்பவர் நிலைபேறுடைய கொள்கையின் அடிப்படையில் கருதப்படுகிறார், தனக்குள்ளேயே இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு விளங்குகிநார் " அதாவது, கடவுளுடைய குமாரனாக இயேசு தன்னை மற்றவருக்கு எதிராகக் கடவுள்மீது காட்டியிருக்கிறார் என்பதாகும்.எகலுக்கும், இயேசுக்கும் தந்தையாகிய தேவனிற்கும் இடையே மனோதத்துவ ஒற்றுமை ஆகியவற்றைக் காண்கிறார். எகல் கூற்றுப்படி இயேசு என்பவர் தெய்வீக மற்றும் மனித பண்பு இரண்டையும் கொண்டவராவார். எகலை மேலும் கடவுள் என்று (இயேசுவே) இறந்து மட்டும் அல்ல... மாறாக, ஒரு தலைகீழ் நடைபெறுகிறது: கடவுளே, செயல்பாட்டில் தன்னைக் காத்துக்கொள்கிறார், பிந்தையவர் மரணத்தின் மரணம் மட்டுமே. மீண்டும் உயிர்பெற்று, இச்செயல்முறைகள் பின்னோக்கி நடைபெறுகின்றன"
இக்கூற்று அன்று நிலவிவந்த கொடுங்கோன்மை, காவலர் ஆட்சி, அரசவை விசாரணை முறைகள், தணிக்கைமுறை ஆகிய அனைத்தையும் புனிதப்படுத்தி அவற்றுக்கு மெய்யியல் நோக்கில் ஏற்பு வழங்கியதாக கூறப்படுகிறது. மூன்றாம் ஃபிரெடரிக் வில்லியம் மன்னனும் அவனது குடிமக்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் எகலின் கருத்துப்படி, நிலவுகின்ற அனைத்தும் நிபந்தனை இன்றி நிச்சயமாக எதார்த்தம் ஆகிவிட முடியாது. நிலவுகின்ற ஒன்று அவசியமாகவும் இருக்கும்போது மட்டுமே எதார்த்தம் என்னும் பண்பைப் பெறுகிறது என்பது எகலின் கருத்தாகும்.
எகலைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை – ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு நடவடிக்கையை எகலே எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் – நிபந்தனையின்றி எவ்விதத்திலும் எதார்த்தம் ஆகிவிட முடியாது. எனினும், அவசியமாய் இருக்கின்ற ஒன்று, வளர்ச்சிப் போக்கின் கடைசி நிலையில் தன்னைப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் நிரூபித்துக் கொள்கிறது.[5]
ஆனால், எதார்த்தம் என்பது சமூக அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிட்ட நிலைமையின் உள்ளடங்கிய பண்பாக எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் எவ்விதத்திலும் இருக்க முடியாது என்பது எகலின் கருத்தாகும். ஃபிரஞ்சு முடியாட்சி 1789-இல் மாபெரும் புரட்சியினால் அழிக்கப்பட வேண்டிய அளவுக்கு எதார்த்தத்துக்குப் புறம்பானதாகவும், அவசியமற்றதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆகிவிட்டிருந்தது. ஆகவே, இந்த எடுத்துக்காட்டில், முடியாட்சி எதார்த்தம் அல்லாததாகவும், புரட்சி எதார்த்தமானதாகவும் இருந்தது. எனவே, வளர்ச்சிப் போக்கில், முன்பு எதார்த்தமானதாக இருந்தது, எதார்த்தம் அல்லாததாக மாறிவிடுகிறது. தனது அவசியத்தை, நிலவுவதற்கான உரிமையை, பகுத்தறிவுக்கு உகந்த தன்மையை இழந்து விடுகிறது. அழிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்துக்குப் பதிலாக ஒரு புதிய, சாத்தியமான எதார்த்தம் எழுகிறது. பழைய எதார்த்தம் புத்திசாலித்தனமாக எதிர்ப்புக் காட்டாமல் சாகுமெனில் இம்மாற்றம் அமைதியாக நிகழும். இந்த அவசியத்தை எதிர்க்குமெனில் இது பலவந்தமாக நிகழும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.