வேதியியலின் வரலாறு
பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதி வரை படிப்படியாக வேதியியலில் நிகழ்ந / From Wikipedia, the free encyclopedia
வேதியியலின் வரலாறு (History of chemistry) என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் பிரிவுகளாக உருவாகியுள்ளன. தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.
வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர் என்பது தெளிவாகிறது. இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.
ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது[1].