![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Hurricane_Isabel_from_ISS.jpg/640px-Hurricane_Isabel_from_ISS.jpg&w=640&q=50)
வெப்ப மண்டலச் சூறாவளி
வலுவான காற்று மற்றும் நிறைய மழையுடன் பெரிய திருப்புமுனை / From Wikipedia, the free encyclopedia
சுழலும் தாழ்வளியழுத்தப் பகுதியை நடுவில் கொண்ட வெப்பமண்டலத்தில் உருவாகும் ஒரு புயலின் வகையே வெப்ப மண்டலச் சூறாவளி (Tropical Cyclone )ஆகும். இதில் தாழ்மட்ட வளிமண்டலச் சுழற்சியே நிலவும். இது பொதுவாக உயர் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்த பெருங்கடல்களில் தோன்றும். இதில் வலிவான காற்றும் சுருள் வடிவிலான பெருமழை பொழியக்கூடிய இடிபுயல்களும் அமைந்திருக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்று வலிமையையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம். அவை, விசைச்சூறை (/ˈhʌrɪkən, -keɪn/),[1][2][3] கடுஞ்சூறை (/taɪˈfuːn/), வெப்ப மண்டலப் புயல், சூறைப்புயல், வெப்ப மண்டலத் தாழ் அழுத்தம், அல்லது வெறுமனே சூறாவளி என்பனவாகும்.[4] விசைச்சூறை என்பது அத்திலாந்திக் பெருங்கடலிலும் வடகிழக்கு அமைதிப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும். கடுஞ்சூறை என்பது வடகிழக்கு அமைதிப் பெருங்கடலில் தோன்றுவதாகும். சூறாவளி தென் அமைதிப் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும்.[4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Hurricane_Isabel_from_ISS.jpg/640px-Hurricane_Isabel_from_ISS.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Catarina_2004-03-27_1630Z_%28cropped%29.jpg/640px-Catarina_2004-03-27_1630Z_%28cropped%29.jpg)
வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஒப்பீட்டளவில் வெதுவெதுப்பான மாபெரும் நீர்நிலைகள் மீதே தோன்றுகின்றன. இவை தம் ஆற்றலை பெருங்கடல்களின் மேற்பரப்பு நீரின் ஆவியாதலில் இருந்து பெறுகின்றன, இந்த ஆவியாதல், ஈரக்காற்று மேலெழும்போது, குளிர்தலால் தெவிட்டலுற்று, மீள்சுருங்கலால் முகில்களாகவும் பின்னர் மழையாகவும் உருமாறுகின்றன. இவற்றின் ஆற்றல் வாயில் நடு அகலாங்கு சூறாவளிகளான வடகீழைப் புயல்களில் இருந்தும் ஐரோப்பிய காற்றுப்புயல்களில் இருந்தும் வேறுபடுகிறது. பின்னவை தம் ஆற்றலை முதன்மையாக கிடைநிலை வெப்பநிலை வேறுபாட்டில் இருந்து பெறுகின்றன. வெப்ப மண்டலச் சூறாவளியின் வலிமையான சுழற்காற்று, சுழலச்சுக்கு உள்முகமாக காற்று பாயும்போது அதற்கு புவியின் சுழற்சி தரும் கோண உந்த அழியாமை இயல்பால் ஏற்படுகிறது. இந்த விளைவால், இவை நிலநடுவரைக்கு 5 பாகை வடக்கிலும் தெற்கிலும் அமைந்த அமைதி மண்டலத்தில் உருவாதல் இல்லை.[5] வெப்ப மண்டலச் சூறாவளிகளின் விட்டம் ஏறத்தாழ 100 முதல் 2,000 கிமீ வரையில் அமைகிறது. ஆப்பிரிக்க கீழைத்தாரை விளைவால் இவை தென் அரைக்கோளத்தில் அருகியே அமைகின்றன. அத்திலாந்திக் பெருங்கடலிலும் அமெரிக்காசிலும் வெதுப்பான நீரால் உருவாகும் இப்புயல்கள் வட அரைக்கோளத்தில் தோன்றுகின்றன. மேலும் நிலநடுவரைக்குத் தெற்காக அமையும் குத்துநிலைக் காற்றுத் துணிப்பு விசை அங்கு, வெப்ப மண்டலத் தாழ்வழுத்தமும் புயல்களும் வெப்ப மண்டலச் சூறாவளிகளாக உருவாதலைத் தவிர்க்கின்றன.
வெப்பமண்டலம் என்பது இச் சூறாவளி தோன்றும் புவிக்கோளப் பகுதியைக் குறிக்கும். பெரும்பாலும் இவை வெப்ப மண்டலப் பெருங்கடல்களிலேயே தோன்றுகின்றன. சூறாவளி இதன் சுழற்சித் தன்மையைக் குறிக்கிறது. இவற்றில் வடக்கு அரைக்கோளத்தில் காற்று இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் காற்று வலஞ்சுழியாகவும் சுழலும். காற்றுச் சுற்றோட்டத்தின் எதிர்திசை கொரியாலிசு விளைவால் ஏற்படுகிறது.
வெப்ப மண்டலச் சூறாவளி அச்சமூட்டும் மழையையும் கடற்கொந்தளிப்பையும், அச்சமூட்டும் காற்றையும் உருவாக்கும். கடலை அண்மித்த பகுதிகளையே பொதுவாக இது தாக்கினாலும், சிலவேளைகளில் கடலிலிருந்து சேய்மையில் அமைந்த பகுதிகளையும் தாக்குவதுண்டு.[6]
உள்நாட்டுப் பகுதிகளைவிட கடற்கரைப் பகுதிகள் வெப்ப மண்டலச் சூறாவளிகளால் பெரிதும் தாக்கப்படுகின்றன. இந்தப் புயல்களுக்கான முதன்மையான ஆற்றல் வாயிலாக வெம்மையான பெருங்கடல் நீர் அமைகிறது. எனவே இவை கடற்கரையருகில் வலிமை மிக்கனவாகவும் உள்ளே நிலம் நோக்கி நகர நகர விரைந்து தம் வலிமையில் குன்றுகின்றன. கடற்கரைச் சிதைவு கடுங்காற்று, மழியாலும் பேரலைகளாலும் புயல் உருவாக்கும் கடும் அழுத்த மாற்றங்களால் தோன்றும் அலையெழுச்சிகளாலும் கடும் புயல்களின் விளைவாலும் நிகழ்கிறது. வெப்ப மண்டலச் சூறாவளிகள் மிகப்பெரும் பரப்பில் இருந்து காற்றை தன்னுள் இழுக்கிறது. கடும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு இது மாபெரும் பரப்பாக அமையும். அந்தக் காற்றில் உள்ள நீரைச் (இதில் வளிமண்டல ஈரமும் கடல்நீர் ஆவியாக்க ஈரமும் அடங்கும்) செறிவாக மிகவும் சிறிய பரப்பில் மழையாகப் பொழிகிறது.மழை பொழிந்ததும், ஈரம் பொதிந்த காற்று தொடர்ந்து பதிலீடு செய்யப்படுவதால், மிக்க் கடும் மழை பொழிந்து, கடற்கரையில் இருந்து 40 கிமீ வரை ஆற்றில் உள்நோக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். இது அவ்வட்டார வளிமண்டலம் தாங்கும் நீரளவினும் பன்மடங்கானதாகும்.
இவை மக்கள்தொகைக்குப் பேரழிவை ஏற்படுத்தினாலும் வறட்சிநிலையைத் தவிர்க்க உதவுகின்றன. இவை வெப்ப ஆற்றலை வெப்ப மண்டலத்தில் இருந்து மிதவெப்ப அகலாங்குகளுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதால், வட்டார, புவிக் கோளக் காலநிலையைச் சமனப்படுத்துகின்றன.