வாந்திபேதி
From Wikipedia, the free encyclopedia
வாந்திபேதி அல்லது காலரா என்பது, விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும்.[1] இப் பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. இந் நோயை உண்டாக்கும் பக்டீரியாக்களைத் தேக்கி வைத்திருப்பது மனித உடலே என்று முன்னர் பெரும்பாலும் நம்பப்பட்டது. ஆனால் நீர்சார் சூழலும் விபிரியோ காலரே என்னும் பக்டீரியாவைத் தேக்கி வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இப்போது அறியப்பட்டுள்ளன. விபிரியோ காலரே வாந்திபேதி நச்சு, சிறுகுடலில் உள்ள சிறுகுடல் இழைமத்தில் தாக்கத்தினால் இந் நோயின் முக்கிய இயல்பான பெரும் வயிற்றோட்டம் ஏற்படுகிறது. மிகக் கடுமையான வகை வாந்திபேதி மிகவிரைவாக இறப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுள் ஒன்று. இது நல்ல உடல்நலம் கொண்ட ஒருவரில் நோயின் அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே குருதிக் குறை அழுத்த நோயாளராக மாற்றக்கூடியது. மருத்துவ சிகிச்சை வழங்காவிட்டால் தொற்று ஏற்பட்ட மூன்று மணி நேரத்துக்குள்ளாகவே நோயாளி இறந்துவிடக்கூடும். பொதுவாக, முதலில் மலம் நீர்த்தன்மையாகப் போகத் தொடங்கியதில் இருந்து அதிர்ச்சி நிலை ஏற்படும் வரையான நோயின் வளர்ச்சிக்கு 4 தொடக்கம் 12 மணிநேரம் வரை எடுக்கக்கூடும். 18 மணிநேரத்திலிருந்து பல நாட்களுக்கிடையில் இறப்பு ஏற்படலாம்.
வாந்திபேதி வராமல் தடுக்கும் முறைகளில் சிறந்த சுத்திகரிப்பு முறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் என்பன முக்கியமாகும்.[2] வாய் மூலம் கொடுக்கப்படும் கொலரா வக்சின் ஆறு மாதம் வரை காக்கக்கூடியது[3] முதன்மையான மருத்துவ முறை நீரிழப்பைத் தடுப்பதற்காக சிறிது இனிப்பும் உப்பும் கொண்ட பானங்களை அருந்துவதாகும்.[3] நாகம் மூலகத்திற்கான பதிலீட்டு உணவுகள் சிறுவர்களில் முக்கியமானதாகும்.[4] கடுமையான நிலைமைகளில் உடலின் உட்செலுத்தக்கூடிய ரின்கரின் லக்டேட்டு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாயிருக்கும்.[3]