புவியின் வளிமண்டலம்
From Wikipedia, the free encyclopedia
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஓர் எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.