லோங் தீவுச் சண்டை
From Wikipedia, the free encyclopedia
புறூக்லின் சண்டை, புறூக்லின் மேட்டுநிலச் சண்டை ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படும் லோங் தீவுச் சண்டை (Battle of Long Island) 1776 ஆகத்து 27 ஆம் தேதி இடம்பெற்றது. 1776 யூலை 4 ஆம் தேதி அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் பின்னர், அமெரிக்க விடுதலைப் போரில் இடம்பெற்ற முதல் பெரிய சண்டை இது. இதில் பிரித்தானியப் படை வெற்றி பெற்றது. வெற்றிகரமான பிரித்தானியப் படை நடவடிக்கையின் தொடக்கமாக அமைந்த இச்சண்டை, உத்திசார்ந்த முக்கியத்துவம் கொண்ட நியூயார்க் நகரத்தின் கட்டுப்பாட்டைப் பிரித்தானியருக்கு வழங்கியது. படைப் பயன்பாட்டிலும், சண்டை உக்கிரத்திலும் விடுதலைப் போரின் மிகப்பெரிய சண்டையாக இது அமைந்தது.
|
||||||||||||||||||||||||||||||
1776 மார்ச் 17 இல் பிரித்தானியரை பொசுட்டன் முற்றுகையில் தோற்கடித்த பின்னர், தலைமைத் தளபதி ஜெனரல் ஜார்ஜ் வாசிங்டன், தனது படைகளை, அப்போது மான்கட்டன் தீவின் தென் முனைக்குள் அடங்கியிருந்த நியூயார்க் நகரத்தைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவந்திருந்தார். போரில் நியூயார்க்கின் துறைமுகம் பிரித்தானியக் கடற்படைக்குச் சிறந்த தளமாக அமையக்கூடும் என்பதை உணர்ந்துகொண்ட வாசிங்டன், நகரத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொண்டு பிரித்தானியரின் தாக்குதலுக்காகக் காத்திருந்தார். யூலை மாதத்தில், ஜெனரல் வில்லியம் ஓவேயின் தலைமையில் வந்த பிரித்தானியப் படை மான்ஹட்டனுக்குச் சற்றுத் தொலைவில் துறைமுகத்துக்கு எதிரே அமைந்திருந்த, மக்கள்தொகை குறைந்த இசுட்டேட்டன் தீவில் (Staten Island) இறங்கின. கப்பல்கள் மூலம் படிப்படியாகக் கீழ் நியூயார்க் குடாவில் தம்மைப் பலப்படுத்திய பிரித்தானியர், அடுத்த ஒன்றரை மாத காலத்தில் தமது படையினர் எண்ணிக்கையை 32,000 ஆக அதிகரித்தனர். துறைமுகத்தின் நுழைவாயிலைப் பிரித்தானியப் படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், நகரத்தைப் பாதுகாப்பது கடினம் என்பதை உணர்ந்துகொண்ட வாசிங்டன், தனது படைகளில் பெரும்பகுதியை மான்கட்டனுக்கு நகர்த்தினார். மான்கட்டனே முதல் இலக்காக இருக்கும் என்று கருதியே அவர் இவ்வாறு முடிவெடுத்தார்.
ஆகத்து 22 ஆம் தேதி, இசுட்டேட்டென் தீவுக்கு எதிரே தென்மேற்குக் கவுன்டியில் கிரேவ்சென்ட் குடாக்கரையில் பிரித்தானியப் படையினர் தரையிறங்கினர். இவ்விடம், மான்கட்டனுக்கான கிழக்கு ஆற்றுக் கடவையில் இருந்து 12 மைல்களுக்குச் சற்று அதிகமான தூரத்தில் இருந்தது. ஐந்து நாட்களின் பின்னர் பிரித்தானியர், குவான் மேட்டுநிலத்தில் இருந்த அமெரிக்கர்களின் பாதுகாப்பு நிலைகளைத் தாக்கினர். அமெரிக்கப் படைகளுக்குத் தெரியாமல், ஓவே தனது படைகளின் முக்கிய பிரிவுகளை அமெரிக்கப் படைகளுக்குப் பின்புறமாகக் கொண்டுவந்து, பக்கவாட்டில் இருந்து தாக்கினார். பீதிக்கு உள்ளாகிய அமெரிக்கப்படை காயம், இறப்பு ஆகியவற்றாலும், பிடிபட்டதாலும் இருபது வீதமானோரை இழந்தது. அதிகமான இழப்பு ஏற்படுவதை 400 மேரிலான்ட் படை வீரர்கள் தடுத்துவிட்டனர். எஞ்சிய அமெரிக்கப் படையினர், அவர்களது முதன்மைக் காப்பரண்கள் இருந்த புறூக்லின் மேட்டுநிலப் பகுதிக்குப் பின்வாங்கினர். பிரித்தானியர், அமெரிக்கப் படைகளை முற்றுகையிட முயன்றனராயினும், 29-30 இரவில், வாசிங்டன் தனது படைகளை எவ்வித பொருள், உயிர் இழப்புக்கள் இன்றி மான்கட்டனுக்கு நகர்த்தினார். மேலும் பல தோல்விகளை அடுத்து, வாசிங்டனும், அமெரிக்கப் படைகளும், நியூயார்க்கை விட்டு முழுவதுமாகத் துரத்தப்பட்டதுடனர். அத்துடன் அவர்கள் நியூ செர்சி ஊடாகப் பென்சில்வேனியாவுக்குப் பின்வாங்கவேண்டியும் ஏற்பட்டது.