![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Jaffna_Fighter_%2528F.E2b%2529.jpg/640px-Jaffna_Fighter_%2528F.E2b%2529.jpg&w=640&q=50)
யாழ்ப்பாணம் (வானூர்தி)
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாணம் (The Jaffna) (சேவைப் பெயர் மலயா இல.11 (சண்டை வானூர்தி) 'யாழ்ப்பாணம்'; MALAYA No. 11 (Fighter) "The Jaffna")[1] என்பது அரச வானூர்தி தொழிற்சாலையினால் வடிவமைத்து, உற்பத்தி செய்யப்பட்ட எப்.இ. 2பி (Farman Experimental 2) வகையைச் சார்ந்த வானூர்தி ஆகும். இது சண்டை, உளவு, குண்டு வீச்சு (பகல், இரவு நேரக் குணடு வீச்சு) ஆகிய செயற்பாடுகளைச் செய்ய வல்லது. இந்த வானூர்தி 22 திசம்பர் 1915 அன்று மலேசியாவில் இருந்த இலங்கை யாழ்ப்பாணத் தமிழர்களால், முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய பிரித்தானிய இராச்சியத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.[2] இது அரச பறப்பு படைப்பிரிவின் எப்.இ. 2பி வகை வானூர்திகளைக் கொண்டிருந்த 25 ஆம் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.[3]
இலங்கையில் நகர்களில் ஒன்றான யாழ்ப்பாணம் என்ற பெயரில் அமைந்த இவ்வானூர்தி மலேசிய வாழ் யாழ்ப்பாணத் தமிழர்களால் தங்கள் பிரித்தானிய அரசுடனான விசுவாசத்தையும் நேச நாடுகளின் முதலாம் உலகப் போருக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அத்துடன் இது இலங்கையர்களின் வானூர்தி பறப்பியலில் முன்பு கொண்டிருந்த ஆர்வமாகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறது.[4][5]