தமிழ் மொழியில், மெய்யெழுத்துக்களின் 3 வகுப்புகளில் ஒன்று. (பிற: வல்லினம் மற்றும் இடையினம்). From Wikipedia, the free encyclopedia
மெல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. வல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ங், ஞ், ண், ந், ம், ன் எனும் ஆறு எழுத்துகளையும் மெல்லின எழுத்துகள் என்கின்றன. இவை மெலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை மெலி, மென்மை, மென்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.[1] "மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணரின் விளக்கம்.[2]
தற்கால மொழியியலின்படி தமிழின் மெல்லின எழுத்துகள் எல்லா இடங்களிலும் மூக்கொலிகள் அல்லது மூக்கினம் என்ற வகைக்குள் அடங்குகின்றன. ஒலிப்பு முயற்சியின்போது, அண்ணக்கடை திறந்து, வாயறையிலிருந்து மூச்சுக்காற்று மூக்கின் வழியாக வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே மூக்கொலிகள்.[3] மெல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:
எழுத்து | அதிர்வு | ஒலிப்பு முறை | ஒலிப்பிடம் |
---|---|---|---|
"ங"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | கடைநா இடையண்ணம் |
"ஞ"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | இடைநா இடையண்ணம் |
"ண"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | நாமடி |
"ந"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | பல் |
"ம"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | ஈரிதழ் |
"ன"கரம் | அதிர்வுள்ள | மூக்கொலி | நுனிநா |
தமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துகள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துகள் ஆகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.