மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)
From Wikipedia, the free encyclopedia
மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஆறாவது இயலாக அமைந்திருப்பது மெய்ப்பாட்டியல்ஆகும். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 வகைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும் 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். இவை உடலின் மெய்ச்சுவைகள். அதாவது மெய்யுணர்வுகள்.[1] இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.
மேலைநாட்டார் காட்டும் 'மெய்ப்பாடுகள் தோன்றும் உணர்ச்சிகள்' பற்றிய கட்டுரையை மெய்ப்பாடு (மேலையர் நெறி) பக்கத்தில் காணலாம்.
- பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.
- சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
- தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு.