முகிலறை
From Wikipedia, the free encyclopedia
முகிலறை (Wilson cloud chamber) என்பது மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை அயனியாக்கும் பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது, எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும்.
சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன் என்னும் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் இதனை முதன் முதலில் வடிவமைத்ததால் இது வில்சன் முகிலறை எனப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக வில்சனுக்கு 1927 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
1920கள் முதல் 1950கள் வரை குமிழறைகள் கண்டுபிடிக்கப்படும் வரை துகள் இயற்பியலில் முகிலறைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, 1932 இல் பொசித்திரன், 1936 இல் மியூயான், 1947 இல் கேயான் போன்றவை முகிலறைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டன.