மின்னல்
வளிமண்டல மின்சார வெளியேற்றம் / From Wikipedia, the free encyclopedia
மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுது, எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது. ஒளிக்கீற்று போல் ஒளி இழையாய் தெரியும் பகுதியில் காற்று மின் மயமாக்கப் படுகின்றது.
சில பொழுதுகளில் மின்னல் ஒரு மரத்தையோ நிலத்தையோ தாக்க வல்லது (இவ்வழியாக மேகங்களில் சேர்ந்திருந்த மின்னூட்டம் நிலத்திற்கு பாய்ந்து விடும்). இம்மின்னல் நிலத்தில் உள்ள விலங்குகளையும், ஆட்களையும் கூட தாக்கும். இதனால் பலர் உயிரிழந்து உள்ளனர் (தொடர்ந்து ஆண்டுதோறும் உயிரிழந்தும் வருகின்றனர்). [1]
வானில் வானூர்தியில் பறந்து செல்லும் பொழுதும் இவ்வாறு தாக்குதல் நிகழும், ஆனால் தரைக்கு இவ்வாற்றல் இறங்க அதிக வாய்ப்பில்லாததால், அதிக சேதம் ஏதும் விளைவிப்பதில்லை.