மனித வரலாறு
From Wikipedia, the free encyclopedia
மனித வரலாறு என்பது, உலகம் முழுவதிலும் ஓமோ சப்பியன்களால் பதிவுசெய்யப்பட்ட அவர்களது அனுபவங்கள் ஆகும். இது புவியின் எல்லா இடங்களிலும், பழைய கற்காலத்தில் தொடங்கி இன்று வரையான மனித இனத்தின் வரலாற்றைக் குறிக்கும். பண்டைய மனித வரலாறு,[1] உலகின் பல்வேறிடங்களிலும் தனித்தனியாக எழுத்துமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் தொடங்குகிறது. எழுத்துமுறையின் கண்டுபிடிப்பு, மனித நினைவுகளை நிலைத்திருக்கக்கூடிய வகையில் துல்லியமாகப் பதிவு செய்வதற்கு உதவியதுடன், அறிவு உலகம் முழுதும் பரவுவதற்கும் உதவியது.[2][3] எனினும், நாகரிகத்தின் அடிப்படை எழுத்துமுறையின் கண்டுபிடிப்புக்கும் முற்பட்டது. இது முன்வரலாறு எனப்படுகிறது. உலக வரலாறு தொடர்பான அறிவு, மிகப் பழங்காலம் தொடங்கி இன்றுவரையிலான எழுத்துமூல ஆவணங்களின் ஆய்வு, தொல்லியல் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்படும் அறிவு என்பவற்றை உள்ளடக்கியது.
மனித வரலாறு, படிப்படியான கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களினால் மட்டுமன்றிச் சடுதியான வளர்ச்சிகளினாலும், புரட்சிகரமான மாற்றங்களினாலும் கூடக் குறிக்கப்படுகின்றது. இவை மனிதனின் பொருள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிகள் தொடர்பான பல காலப்பகுதிகளை உள்ளடக்குகிறது. இத்தகைய காலப்பகுதிகளுள் ஒன்றுதான் வேளாண்மைப் புரட்சி. கிமு 8,500க்கும் 7,000க்கும் இடையில் முறையான தாவர வளர்ப்பிலும் விலங்கு வளர்ப்பிலும் மனிதர் ஈடுபட்டனர்.[4][5][6] இது இலேவண்டு, பண்டை மெசொப்பொத்தேமியா, பண்டைய எகித்து ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் நடைபெற்றது. இது அயலிலுள்ள பகுதிகளுக்கும் பரவியதுடன், சில பகுதிகளில் தனியாகவும் வளர்ச்சியடையலாயிற்று. இது பெரும்பாலான மனிதர்களை நிரந்தரமான குடியேற்றங்களை அமைத்து வேளாண்மை செய்பவர்களாக மாற்றியது.[7] வேளாண்மை வழங்கிய, ஒப்பீட்டளவில் கூடிய பாதுகாப்பும், உற்பத்தித்திறன் அதிகரிப்பும் இவ்வாறான சமுதாயங்கள் வரிவடைய வழி வகுத்தன. தொடர்ச்சியாகப் போக்குவரத்து முறை வளர்ச்சி அடையவே அதற்கு இணையாகக் குடியேற்றங்களும் பெரியனவாக வளர்ந்தன.
எல்லா மனிதருமே இவ்வாறு நாடோடி வாழ்க்கையைக் கைவிடவில்லை. சிறப்பாகத் தனிப்படுத்தப்பட்டவையும், வளர்க்கக்கூடிய தாவரங்களைக் கொண்டிராதனவுமான பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சியடையவில்லை. நாடோடி வாழ்க்கையை விட்ட மனிதர், உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத நீரைத் தருகின்ற ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அண்டிய பரவலான குடியேற்றங்களில் வாழ்ந்தனர். கிமு 3000 ஆண்டை அண்டிய காலப்பகுதியில், இத்தகைய குடியேற்றங்கள், மையக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்ததும், இயூபிரட்டீசு, இடைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்டதுமான மெசொப்பொத்தேமியாவிலும்,[8] எகிப்தின் நைல் நதிக்கரையிலும்,[9][10][11] சிந்து நதியை அண்டிய சிந்துப் பள்ளத்தாக்குப்[12][13][14] பகுதிகளிலும் உருவாயின.
ஐரோப்பா, அண்மைக் கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பழைய உலகத்தின் வரலாறு,
- கிபி 476 வரையான தொல்பழங்காலம்;
- இசுலாமியப் பொற்காலம் (கிபி 750 - கிபி 1258), தொடக்க ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கிய 5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையான நடுக் காலம்;[15][16]
- அறிவொளிக் காலத்தை உள்ளடக்கிய, 15 தொடக்கம் 18 ஆம் நூற்றாண்டு வரையான தொடக்க நவீன காலம்,[17]
- தொழிற் புரட்சி முதல் இன்று வரையான காலத்தை உள்ளடக்கிய பிந்திய நவீன காலம்
எனப் பல கட்டங்களாக வகுக்கப்படுகிறது. ஐரோப்பாவில், கிபி 476 இல் நிகழ்ந்த மேற்கத்திய உரோமப் பேரரசின் வீழ்ச்சி தொல்பழங்காலத்தின் முடிவையும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தை உருவாக்கிய நடுக் காலத்தின் தொடக்கத்தையும் குறிப்பதாகக் கொள்கின்றனர்.[18][19] 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அசையும் எழுத்துக்களைப் பயன்படுத்திய நவீன அச்சு முறையை[20] யொகான்னசு குட்டன்பர்க் கண்டுபிடித்த பின்னர் தகவல் தொடர்பில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இது, நடுக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நவீன காலம் உருவாகவும், அறிவியல் புரட்சி ஏற்படவும் வழி வகுத்தது.[21] 18 நூற்றாண்டளவில், அறிவு, தொழினுட்பம் ஆகியவற்றின் திரட்சி, குறிப்பாக ஐரோப்பாவில், உய்நிலைப் பொருண்மையை எட்டியதன் மூலம் தொழிற்புரட்சியை உருவாக்கியது.[22]
பண்டைய அண்மைக் கிழக்கு,[23][24][25] பண்டைய சீனா,[26] பண்டைய இந்தியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில் வரலாற்றுக் காலக்கோடு வேறு விதமாக வளர்ச்சியடைந்தது. 18 ஆம் நூற்றாண்டை அண்டி விரிவடைந்த உலகளாவிய வணிகத்தினாலும், குடியேற்றங்களினாலும், பெரும்பாலான உலக நாகரிகங்களின் வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. சென்ற ஆயிரவாண்டின் கடைசிக் காற்பகுதியில், அறிவு, தொழினுட்பம், வணிகம், போரின் அழிவுத்தன்மை என்பன வேகமாக வளர்ச்சியடைந்து இன்று மனித சமுதாயம் முகம் கொடுக்கும் வாய்ப்புக்களையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தியது..[27][28]