பெர்லின் சுவர்
செருமானிய மக்கள் குடியரசால் மேற்கு பெர்லினை சுற்றி கட்டப்பட்ட சுவர் / From Wikipedia, the free encyclopedia
பேர்லின் சுவர் அல்லது பெர்லின் சுவர் (Berlin Wall) (செருமன்: Berliner Mauer, உருசிய மொழி: Берли́нская стена́), என்பது கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும் சுவர் ஆகும்.
பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி 1961 ஆகத்து 13 அன்று ஆரம்பித்தது. இச்சுவர் பனிப்போரின் இறுதியில் 1989 இல் முற்றாக இடிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இச்சுவரைத் தாண்டி மேற்கு ஜெர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[1]
பனிப்போரின் இறுதியில் உள்நாட்டுக் குழப்பங்களின் உச்சக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனி அரசு 1989 நவம்பர் 9 இல் மேற்கிற்குள் செல்வதற்கு மக்களை அனுமதிப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு ஜெர்மனியினர் இவர்களை மறு பக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில கிழமைகளில் சுவர் இடிக்கப்பட்டது.
பேர்லின் சுவரின் வீழ்ச்சி ஜெர்மனி இரண்டும் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவை 1990 அக்டோபர் 3 இல் இணைந்தன.