From Wikipedia, the free encyclopedia
பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 (ஆங்கிலம்: 2009 Perak constitutional crisis; மலாய்: Krisis perlembagaan Perak 2009); என்பது 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை குறிப்பதாகும்.
2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[1] அதனால், மாநில ஆட்சி உடைந்தது. அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார்.
பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் பேராக் மந்திரி பெசார் முகமது நிசார் ஜமாலுதீன் கோரிக்கை வைத்தார். அதை பேராக் சுல்தான் பேராக் சுல்தான் ராஜா அசுலான் சா நிராகரித்தார். அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[2]
தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் ராஜா அசுலான் சா தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். முகமது நிசார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டன. [3]
இ இட் பூங் என்பவர் ஜெலாப்பாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அத்துடன் அவர், பேராக் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகரும் ஆவார். இவருடன் பேராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி என்பவரும்,[4][5] சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஒஸ்மான் முகமட் ஜைலு என்பவரும், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங்[6][7] என்பவரும், மக்கள் கூட்டணியில் இருந்து, தேசிய முன்னணிக்கு ஆதரவாகத் தங்களைச் சுயேட்சை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர்.[8]
இவர்களில் ஜமாலுடின் முகமட் ராட்சி எனும் சட்டமன்ற உறுப்பினர், சட்டசபையின் மூத்த செயற்குழு உறுப்பினரும் ஆவார். ஒரு செயற்குழு உறுப்பினர், மாநில அமைச்சரவைப் பதவியைக் கொண்டவர்.
மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக், பேராக் சுல்தான் ராஜா அசுலான் சாவை, சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். அப்போது நஜீப் துன் ரசாக் பேராக் மாநில தேசிய முன்னணியின் தலைவராக இருந்தார். பேராக் சுல்தானகம் பிரதமருக்கு அனுமதி வழங்கியது. பேராக் மாநில சட்டமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகச் சுல்தானிடம் கூறினார். அது உண்மை என நிரூபிக்குமாறு சுல்தான் பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
அதே தினம் பிற்பகல் மூன்று மணி அளவில் 31 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் மறுபடியும் சுல்தானைச் சென்று கண்டார். அவருடன் வந்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு மக்கள் கூட்டணியின் மீது நம்பிக்கை இல்லை என்றும், தாங்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.[9]
பேராக் மாநிலத்தில் இந்த அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், மக்கள் கூட்டணிக்கு 32 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தேசிய முன்னணிக்கு 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்னர், மக்கள் கூட்டணிக்கு 28 உறுப்பினர்களும் தேசிய முன்னணிக்கு 28 உறுப்பினர்களும் எனும் நிலை உருவானது. மக்கள் கூட்டணியிலிருந்து சுயேட்சையாக மாறிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஆதரவைத் தேசிய முன்னணிக்கு வழங்குவதாகப் பகிங்கரமாக அறிவித்தனர்.
இந்த அரசியல் சாசன நெருக்கடியில் காணப்படும் சர்ச்சைக்குரிய அம்சங்கள்:[10]
இது தொடர்பாக, 2009 மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பேராக் முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்வதற்கு சுல்தானுக்கு அரசியலமைப்பின்படி உரிமையில்லை என்று அறிவித்தது. அடுத்த பதினொரு நாட்களில், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் புதிய தீர்ப்பை வழங்கியது.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரும், சபாநாயகரும் அதிகாரத்தில் நீடிப்பதற்கு உரிமை உள்ளது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[12] மேலும், மாநில சட்டசபையின் பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பதிலும், ஒரு மாநில அரசாங்கத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் ஒரு சுல்தானுக்கு இல்லை என்பதிலும் காணப்படும் வேறுபாடுகளில், உயர்நீதிமன்ற நீதிபதி தவறு செய்து இருக்கலாம்[13] என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.[14]
அந்தத் தீர்ப்பிற்குப் பின்னர், தேசிய முன்னணியின் முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் நிரந்தரமாக முதலமைச்சர் ஆனார்.[15] மேல் முறையீடு செய்யப் போவதாக மக்கள் கூட்டணி அறிவித்தது.
பேராக் மாநில அரசியல் நெருக்கடி 2009 ஜனவரி 25இல் தொடங்கிவிட்டது. தேசிய முன்னணியைச் சேர்ந்த நாசருடின் ஹாஷிம்[16] என்பவர் மக்கள் கூட்டணியுடன் இணையப் போவதாக அறிவித்தார்.[17] இவர் பேராக் மாநில போத்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரைப் போன்று மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் கூட்டணியுடம் சேர்வார்கள் என்று மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.[18]
இதே தருணத்தில் பேராக் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார், மேலும் மூன்று தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அறிவித்தார். நாசருடின் ஹாஷிமின் கட்சித் தாவல், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை உண்மையிலேயே கோபப்படுத்தி விட்டது. நாசருடினுக்கு மேல்மட்ட பதவி எதுவும் கிடைக்கவில்லை எனும் ஆதங்கத்தில் கட்சி மாறினார் என்று சொல்லிய பிரதமர் மிகவும் வேதனைப்பட்டார்.
இந்தக் கட்டத்தில், அப்போதைய பேராக் மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவராக இருந்த தாஜுல் ரோஸ்லி தன் பதவியை ராஜிநாமா செய்தார். அந்தப் பதவியை, மலேசிய நிதியமைச்சராக இருந்த நஜீப் ரசாக் ஏற்றுக் கொண்டார்.[19] பின்னர் இவர் மலேசியப் பிரதமரானது வேறு நிகழ்ச்சி.
2009 ஜனவரி 30இல், பேராக் மாநில அரசாங்கத்தின் இரு செயற்குழு உறுப்பினர்கள் திடீரென தங்களின் இல்லங்களிலிருந்து காணாமல் போய்விட்டனர்.[20] இருவருமே மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜமாலுடின் மாட் ராட்சி என்பவர் மாநில முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராகப் பரிந்துரை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.[21]
இன்னொருவர் முகமட் ஒஸ்மான் ஜைலு. இருவரின் மீதும், ஏற்கனவே லஞ்சக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தக் கட்டத்தில் மாநில சட்டசபையின் சபாநாயகராக இருந்த வி. சிவகுமார், காணாமல் போன இரு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டன.
அதனால், அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.[22] 2009 பிப்ரவரி 2இல், காணாமல் போன இவ்விரு சட்டமன்ற உறுப்பினர்களும் திடீரென காட்சி தந்தனர்.
தாங்கள் மக்கள் கூட்டணியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதனால் தேசிய முன்னணிக்கு தங்களின் ஆதரவுகளை வழங்குவதாகவும் அறிவித்தனர்.[23] சபாநாயகர் வி. சிவகுமாரின் வேண்டுகோளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.[24] அவ்விரு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்றும் அறிவித்தது.[25][26]
சபாநாயகர் வி. சிவகுமாரின் வேண்டுகோளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்த மறுநாள், அதாவது 2009 பிப்ரவரி 3இல், துணைச் சபாநாயகராக இருந்த ஹீ இட் பூங், தான் சுயேட்சை உறுப்பினராக மாறுவதாக அறிவித்தார். தேசிய முன்னணிக்கு தன் முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார். நிலைமை மோசமாகவே, பேராக் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார், மாநில சுல்தானைச் சந்தித்து உடனடியாக ஓர் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு கோரிக்கை வைத்தார்.[27]
அதே தினத்தில், பேராக் மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவராக இருந்த நஜீப் ரசாக்கும் சுல்தானைச் சந்தித்துப் பேசினார். அவருடன் கட்சி மாறிய ஜமாலுடின் மாட் ராட்சி, முகமட் ஒஸ்மான் ஜைலு, ஹீ இட் பூங் ஆகியோரும் இருந்தனர். முதன்முதலில் கட்சி மாறுவதாகச் சொன்ன நாசருடின் ஹாஷிம், தான் மறுபடியும் தேசிய முன்னணிக்கே திரும்பி வருவதாக அறிவித்தார்.
பேராக் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் எனும் நல்ல எண்ணத்துடன் தான் மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்பி வருவதாகவும் அவர் காரணம் கூறினார். ஆக, மாநிலச் சட்டமன்றத்தில் தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை இருப்பதால், தேசிய முன்னணி புதிய அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக நஜீப் ரசாக் சுல்தானிடம் கோரிக்கை வைத்தார்.
இதே போல ஓர் அரசியல் நெருக்கடி 1994ஆம் ஆண்டு சபா மாநிலத்திலும் நடைபெற்றுள்ளது. அந்த ஆண்டு நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி 25 இடங்களையும் தேசிய முன்னணி 23 இடங்களையும் பெற்றன. தேர்தல் முடிந்த சில நாட்களில், சபா ஐக்கிய கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தேசிய முன்னணிக்கு கட்சி தாவினர். அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர் தேசிய முன்னணியே புதிய மாநில அரசாங்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டது.[28]
மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு முகமட் நிஜார் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்படுவதாக, பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் ஷா அறிவித்தார். அத்துடன் நிஜாரின் அமைச்சரவையில் உள்ள அனைவரையும் ராஜிநாமா செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.[29] பேராக் மாநில அரசியலமைப்பு Article XVIII (2)(b) விதிகளின்படி அவ்வாறு கட்டளையிட தமக்கு அதிகாரம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.[30]
இதன் தொடர்பாக, பேராக் மாநில அரசியலமைப்பு Article 16(6) விதிகளை எடுத்துக் காட்டிய ஜ.செ.க. ஆலோசகர் லிம் கிட் சியாங், மாநில முதலமைச்சரின் ஆலோசனைகளைச் செவிமடுக்க, சுல்தான் கடப்பாடு கொண்டவர் என்று வலியுறுத்தினார்.
முகமட் நிஜார் ராஜிநாமா செய்ய மறுத்தார். மக்களாட்சி காரணங்களை முன்வைத்து, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க விடுத்த தம்முடைய கோரிக்கையை மறுபரீசலனை செய்யுமாறு சுல்தானைக் கேட்டுக் கொண்டார். சுல்தான் மறுக்கவே, மாநிலச் சட்டமன்றக் கட்டிடத்தைக் காவலர்கள் முற்றுகையிட்டனர்.[31] முகமட் நிஜாரும் அவருடைய அமைச்சரவையும் கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப் படுத்தப்பட்டனர்.
ஜாம்ரி அப்துல் காதிரை புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும்படி பேராக் சுல்தான் கேட்டுக் கொண்டார். அதே சமயத்தில் முகமட் நிஜாரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2009 பிப்ரவரி 6ஆம் தேதி ஜாம்ரி அப்துல் காதிர், புதிய முதலமைச்சராகச் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.[32]
2009 பிப்ரவரி 6ஆம் தேதி காலையில் முகமட் நிஜாரும், அவருடைய அமைச்சர்களும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்த போது அவர்களுடைய அலுவலக உடைமைகள் அனைத்தும் துப்புரவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன், மாநிலச் செயலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கட்டளையிடப் பட்டனர். 45 நிமிடங்கள் கழித்து முகமட் நிஜார் அங்கிருந்த காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.[33]
2009 பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 4.08க்கு, பேராக் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜாம்ரி அப்துல் காதிர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார். சத்திய பிரமாண நிகழ்ச்சி கோலாகங்சார் அரச நகரத்தின் இஸ்கண்டாரியா அரண்மனையில் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜாம்ரி அப்துல் காதிரின் சத்திய பிரமாணத்தை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் அரண்மனைக்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.[34]
ஜாம்ரி அப்துல் காதிர் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டதின் நீதி நெறிமுறைகளுக்கு, மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார். ஜாம்ரி அப்துல் காதிரின் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது.[35] எனவே உயர்நீதிமன்றத்தில் அந்த நியமனம் குறித்து வழக்கு தொடரப் போவதாக முகமட் நிஜார் அறிவித்தார்.[36]
இதற்கிடையில் 2009 பிப்ரவரி 7ஆம் தேதி, முகமட் நிஜாரும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒன்று கூடினர். அந்த இல்லத்திலிருந்து முகமட் நிஜார் அப்போது வெளியேறவில்லை. பேராக் மாநிலம் தொடர்பான சட்டமன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேசினர்.
புதிய அரசாங்கம் சட்டபடி செல்லாது என்று சபாநாயகர் வி. சிவகுமார் அறிவித்தார். மாநிலச் சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்த மரத்திற்கு அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார். சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் மரத்தின் அடிவாரத்திலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார். இந்த நிகழ்ச்சி, மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உருவகம் பெற்று உள்ளது.[37]
மரத்தின் அடிவாரத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தைப் பார்ப்பதற்கு, ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் கூடி நின்றனர். கைதட்டல்கள் மூலமாகத் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவர்கள் வேதனை அடைந்தனர். கலைந்து போகுமாறு பொதுமக்களைக் காவல்துறையினர் கடுமையானத் தொனியில் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.
மரத்தின் கீழ் நடைபெற்ற அந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தில், 27க்கு 0 எனும் வாக்குகளின் பெரும்பான்மையில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[38]
ஒரு மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டம் கேலிக்கூத்தானது என்று அறிவித்த பாரிசான் நேசனல், அந்தக் கூட்டத்திற்கு ஒரு பகிங்கரமான கண்டனத்தையும் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் பாரிசான் நேசனல் அறிவித்தது.
பேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் ராஜா அஸ்லான் ஷாவிற்கு மக்கள் கூட்டணியின் முகமட் நிஜார் ஜமாலுடின், ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் கடசிவரையில் நிறைவேற்றப்படவில்லை.
சிவகுமார் நடத்திய அவசரக் கூட்டத்தின் பிரதான இடமாக விளங்கிய அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.[41]
2009 மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், பேராக் அரசியல் இழுபறி குறித்து புதிய ஒரு தீர்ப்பை வழங்கியது. மாநிலச் சட்டசபையில் எந்த ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, பாரிசான் நேசனல் மாநில ஆட்சியை எடுத்துக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது. மக்கள் கூட்டணியின் முகமட் நிஜார் ஜமாலுடின்தான் இன்னும் பதவியில் இருக்கிறார் என்று அறிவித்தது.[42]
மறுநாள் பாரிசான் நேசனல், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை கோரி விண்ணப்பம் செய்தது. அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 12 மே 2010இல் கூடிய மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், மாநில அரசாங்கத்தை பாரிசான் நேசனல் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.[43] தேசிய நடுவண் நீதிமன்றமும் 5க்கு 0 எனும் நீதிபதிகளின் வாக்கெடுப்பின் மூலமாக அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.[44] அத்துடன், ஏற்கனவே கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பேராக் மாநிலத்தின் அரசியல் அமைப்பும், அதன் சட்டதிட்டங்களும் விரிசல் அடைகின்றன என்று, 2009ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த அம்பிகா சீனிவாசன் கூறினார். சட்டசபையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்த ஒரு மாநிலச் செயலாளருக்கும் அதிகாரம் இல்லை. அதே போலக் காவல்துறைக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், சபாநாயகருக்கு மட்டுமே சகல உரிமைகளும் உள்ளன. அவர் எந்த நேரத்திலும் சட்டசபை அவசரக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க முடியும்.
“ | நம்முடைய நீதி அமைப்புகள், நீதிமன்றங்கள், காவல்துறை போன்றவை சோதிக்கப்படுகின்றன. அவை சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா இல்லையா என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம் | ” |
என்று தம் கருத்தையும் கூறினார்.[45] மலேசியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான துங்கு ரசாலி ஹம்சா,
“ | பேராக் மாநில சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால், இப்பேர்ப்பட்ட ஓர் இழுபறி வந்து இருக்காது | ” |
என்றார்.[46] மலேசிய மனித உரிமைக் கழகமும் அதே கருத்தைக் கூறியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.