பிரமாணம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய தத்துவத்தில் பிரமாணங்கள் (சமசுக்கிருதம்: प्रमाण, Pramāṇas) என்பது "சான்று", "அறிவுக்கான வழிமுறை" ஆகிய நேரடிப் பொருளுடையது.[1][2] பண்டைக் காலத்திலிருந்தே இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக இது உள்ளது. இது ஒரு அறிவுக் கோட்பாடு என்பதுடன், மனிதர்கள் துல்லியமானதும் உண்மையானதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்ததும் ஏற்புடையதுமான வழிமுறைகளை இது உள்ளடக்குகின்றது.[2] சரியான அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி, எவ்வாறு ஒருவர் அறிகிறார் அல்லது அறியாமல் இருக்கிறார், எந்த அளவுக்கு ஒருவர் அல்லது ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவற்றுக்கான விடை காண்பதே பிரமாணத்தின் குறிக்கோள் ஆகும்.[3][4] ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன.[5]