பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்புவதற்கு இந்திய அரசிடம் அனுமதி வேண்டி, அந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் பழ. நெடுமாறன் செப்டம்பர் 12, 2007 அன்று காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கினார்.
தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி செப்டம்பர் 14, 2007 அன்று பழ. நெடுமாறனுக்கு "தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், பழ. நெடுமாறன் அந்த இரு நாட்கள் வரைக்கும் உண்ணாநோன்புப் போராட்டம் தொடரும் என்று பதில் அனுப்புனார்.
இதன் பின்னர் செப்டம்பர் 15, 2007 அன்று மதியம் பா.ம.க. நிறுவனர் இராமதாசு மு. கருணாநிதி வழங்கிய உறுதிமொழியைத் தெரிவித்து விளக்கியதை அடுத்து பழ. நெடுமாறன் தனது போராட்டத்தை பழச்சாறு உட்கொண்டு முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த உண்ணாநோன்புப் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்தது.