![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Emblem_of_the_United_Nations.svg/langta-640px-Emblem_of_the_United_Nations.svg.png&w=640&q=50)
பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு
அரசுகளுக்கு இடையேயான அறிவியல் அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஐக்கிய நாடுகள் அவையின் உலக நாடுகளுக்கு இடையேயான அமைப்பாகும்.[1][2] இக்குழு புவி சூடாவதால் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அதன் மதிப்பீடு, தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகளை பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதுடன், எச்சரிக்கை செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.[3][4] இதன் தாய் அமைப்புகளாக உலக வானிலையியல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் உள்ளது.
![]() | |
![]() | |
சுருக்கம் | IPCC |
---|---|
உருவாக்கம் | 1988; 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1988) |
வகை | குழு |
சட்ட நிலை | செயலில் உள்ளது |
தலைமையகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
தலைமை | ஹோய்சுங் லீ |
தாய் அமைப்பு | உலக வானிலையியல் அமைப்பு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் |
வலைத்தளம் | ipcc |
உலக வானிலையியல் அமைப்பால் 1988-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு நிறுவப்படடது. பின்னர் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும் இக்குழுவை வழிநடத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அனைத்து நாடுகளும் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் உறுப்பினர்கள் ஆவார்.[5] பருவநிலை மாற்றத்திற்கான பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை செய்து கொள்ளும் பணிக்கு பங்களிக்கும் அறிக்கைகளை இக்குழு உருவாக்குகிறது.[6][7]
இக்குழுவின் முக்கிய நோக்கம் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை புவி மற்றும் புவியின் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிலே நிலை நிறுத்துவதாகும்.[6] இக்குழுவின் ஐந்தாவது ஆய்வறிக்கையின் அடிப்படையில் 2015-ஆம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.[8]
பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின. 1950-ஆம் ஆண்டு முதல் புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிட்ட இந்தக் குழுவின் அறிக்கை கூறியது உலக நாடுகளுக்கிடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.
தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட்டு, தற்போது புவி சூடாதல் 1.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018இல் இக்குழு அறிக்கை வெளியிட்டது. அரசுத் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.
2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 190 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக வெப்பமயமாதலை தொழில்துறைக்கு முந்தைய நிலையில் இருந்து கூடுதலாக 2 செல்சியஸ் அல்லது 1.5 செல்சியஸ்சுக்குள் மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால் கார்பன் உமிழ்வு கடுமையாகக் குறைக்கப்படாத வரை, இந்த நூற்றாண்டுக்குள்ளாகவே மேற்கூறிய இரண்டு இலக்குகளும் மீறப்படும் என்று இப்போது வெளியாகி இருக்கும் ஐபிசிசி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் கிளாஸ்கோவில் 2021-ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் COP26 என அழைக்கப்படும் ஒரு முக்கிய பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.
வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அதை "மனித குலத்துக்கான சிவப்புக் குறியீடு" என்று அழைக்கிறார். பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று "அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள்" கவலை தெரிவித்துள்ளன.
"வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம்," என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறினார். அவர் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக இருக்கிறார். மாலத்தீவு உலகின் தாழ்வான நாடு. அந்த நாட்டின் பல தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில சென்டி மீட்டர் உயரத்திலேயே அமைந்துள்ளன.[9]