பரம வீர சக்கரம்
From Wikipedia, the free encyclopedia
பரம் வீர் சக்கரம் (Param Vir Chakra அல்லது PVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும், காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழியில் உள்ள இந்த விருதின் பெயரின் தமிழாக்கம் உயரிய வீரர் பதக்கம் என்பதாகும்.
சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகத்து 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில், இந்திய அரசு வழங்கும் விருதுகளில், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது
பரம் வீர் சக்கரத்திற்கு இணையான அமைதிக்கால, மிக உயரிய படைத்துறை விருது, அசோகச் சக்கர விருது ஆகும். இந்த விருது போர்களத்தில் அல்லாத, பிற இடங்களில் காண்பிக்கப்படும் "மிக உயரிய வீரதீரச் செயலுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும்" வழங்கப்படுகிறது. இது படைத்துறை அல்லாது, குடிமக்களுக்கும் வழங்கபடக்கூடியது. பரம் வீர் சக்கரத்தைப் போலவே இதுவும் மரணத்திற்கு பின்பும் வழங்கக்கூடியது.
இந்த விருது பெற்ற லெப்டினன்ட் நிலைக்கு கீழான (இணையான பிற சேவையினருக்கு) நிதிப் படி வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிதிக்கொடையும் வழங்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம், அவர் இறக்கும்வரை அல்லது மறுமணம் புரியும்வரை வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த இந்த நிதி உதவி பெரும் சர்ச்சையில் இருந்தவாறுள்ளது. மார்ச்சு 1999 நிலவரப்படி இது ரூ.1500/- என்ற அளவிலேயே இருந்தது.