பன்னாட்டுத் தாய்மொழி நாள்
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெசுக்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் அறிவிக்கப்பட்டது.[1] இது பன்னாட்டுத் தீர்மானம் 56/262 வழி பன்னாட்டுப் பொதுமன்றில் முறையாக 2002 இல் ஏற்கப்பட்டது[2].தாய்மொழி நாள் என்பது பன்னாட்டவையில் 2007 ஆம் ஆண்டு மே 16 இல் முன்னெடுத்த 61/266 தீர்மானத்தின்படி "உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின்" ஒரு பகுதியே ஆகும்.[3] இத்தீர்மானம் 2008 ஆம் ஆண்டை பன்னாட்டு மொழிகளுக்கான ஆண்டாகவும் அறிவித்தது.[4][5][6][7]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Shaheed_minar_Roehl.jpg/640px-Shaheed_minar_Roehl.jpg)
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[8] வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது[9]