![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Neutrophil_with_anthrax_copy.jpg/640px-Neutrophil_with_anthrax_copy.jpg&w=640&q=50)
நோய் எதிர்ப்பாற்றல் முறைமை
From Wikipedia, the free encyclopedia
நோய் எதிர்ப்பாற்றல் (Immune system) என்பது, நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த பொறிமுறைகளின் தொகுதி ஆகும். இத் தொகுதி, வைரசுகள் முதல் ஒட்டுண்ணிப் புழுக்கள் வரையிலான நோய்க்காரணிகளைக் கண்டுபிடிக்கின்றது. இத் தொகுதி முறையாகச் செயற்படுவதற்கு உயிரினங்களின் சொந்த ஆரோக்கியமான உயிரணுக்கள் அல்லது கலங்கள், திசுக்கள் (tissue) என்பவற்றிலிருந்து முன் சொன்ன நோய்க்காரணிகளைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் உயிரினங்களில் தொற்றிக்கொள்வதற்குப் புதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்வதனால் இவ்வாறு கண்டறிதல் மிகவும் சிக்கலானது ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Neutrophil_with_anthrax_copy.jpg/640px-Neutrophil_with_anthrax_copy.jpg)
இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான பக்டீரியா போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நொதியத் (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால மெய்க்கருவுயிரிகளில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், டிபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன.
மனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளில் இந்த நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் முன்னேற்றமடைந்த எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு பொறிமுறைகளைக் [1] கொண்டிருக்கும். இந்த பொறிமுறையானது பல்வேறு வகையான புரத மூலக் கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு இடையிலான இயக்க நிலையிலுள்ள வலைப் பின்னலை உள்ளடக்கியதாகும். இதனால் மனிதனிலுள்ள சிக்கலான எதிர்ப்பு விளைவானது, நீண்டகால தொடர் பயன்பாட்டால், குறிப்பிட்ட நோய்க்காரணிகளை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்ப்பு திறனை நினைவில் கொள்ளக் கூடிய ‘இசைவாக்கப்பட்ட எதிர்ப்பாற்றல்' ("adaptive immunity" or "acquired immunity") என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராக உருவாகும் முதலாம்தர எதிர் விளைவானது நினைவில் கொள்ளப்பட்டிருக்கையில், அதே நோய்க்காரணி மீண்டும் தாக்கும்போது, முன்னையதை விடவும் வீரியமான எதிர் விளைவானது உடலில் உருவாவதனால், அந்நோய்க்காரணிக்கு எதிராக உடல் தொழிற்பட்டு நோயை முற்றாக எதிர்க்கும் தன்மையை பெறுகின்றது. இதனடிப்படையிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறான நோயெதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் குறைபாடும் ஒரு நோயாக இருக்கிறது. இது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய் (immunodeficiency) என அழைக்கப்படுகிறது. மனிதரில் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியின் திறன் சாதாரண நிலையைவிட குறையும்போது, பல தொற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவும், தொற்று நோய்களால் இறப்பு ஏற்படவும் ஏதுவாகின்றது. இவ்வகை குறைபாட்டு நோயானது, ஒருவரில் பாரம்பரிய முறையில் கடத்தப்படும் ஒரு நோயாகவோ, அல்லது எச்.ஐ.வீ (HIV) போன்ற வைரசு தொற்றினால் ஏற்படும் எய்ட்சு (AIDS) நோயாகவோ இருக்கலாம்.
அதேவேளை, சிலசமயம், இந்த எதிர்ப்பாற்றல் முறைமையின் அளவுக்கதிகமான தொழிற்பாட்டினால், சாதாரண இழையங்கள்கூட ஒரு வெளி உயிர்க் காரணியாக இனம் காணப்பட்டு தாக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இது தன்னுடல் தாக்குநோய் என அழைக்கப்படும்.[2]