![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Spreading_homo_sapiens_la.svg/langta-640px-Spreading_homo_sapiens_la.svg.png&w=640&q=50)
நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு
From Wikipedia, the free encyclopedia
தொல்மானிடவியல் அடிப்படையில், நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு என்பது, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதர் தோன்றிய இடம், அவர்களின் தொடக்ககாலப் புலப்பெயர்வு என்பவை தொடர்பில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு ஆகும். "ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றம்" கோட்பாடு, "அண்மை ஒற்றைத் தோற்றுவாய்க் கருதுகோள்", "மாற்றீட்டுக் கோட்பாடு", "அண்மை ஆப்பிரிக்கத் தோற்றுவாய் மாதிரி" போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது.[2][3][4][5][6] ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர், ஒற்றைப் புலப்பெயர்வு அலையொன்றின் மூலம் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி ஏற்கெனவே வாழ்ந்த பிற மனித இனங்களை மாற்றீடு செய்து உலகம் முழுதும் பரவினர் என்று இக்கோட்பாடு கூறுகின்றது.[7],[8] [9]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Spreading_homo_sapiens_la.svg/640px-Spreading_homo_sapiens_la.svg.png)
1. ஓமோ சப்பியன்சு
2. நீன்டர்தால்கள்
3. தொடக்க ஒமினிட்டுகள்
முதற் பரம்பல், 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு ஆப்பிரிக்கா ஊடாக இடம்பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று கருதப்படுகிறது.[10].[11][12][13][14] ஆனால், இந்த அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர்கள், நவீன மனிதர் 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தாவது சீனாவில் வாழ்ந்து வருகின்றனர் என்கின்றனர். இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற்கரையூடான தெற்குப் பாதையூடாகச்[15] சென்ற மனிதர் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியாவரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர்.[16][8][9][10]
இந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இக்கருதுகோள், ஆப்பிரிக்காவிலிருந்து அலையாக வெளியேறிய ஓமோ சப்பியன்சு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஓமோ இரெக்டசுக் குழுக்களோடு இனக்கலப்புற்றனர் என்கிறது.[17][18]