![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Sthalasayanaperumal_kovil.jpg/640px-Sthalasayanaperumal_kovil.jpg&w=640&q=50)
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
திருத்தலங்களில் 63–ஆவது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 14–ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் | |
---|---|
![]() தலசயனப் பெருமாள் கோயிலின் முன்பக்கம் | |
புவியியல் ஆள்கூற்று: | 12.617475°N 80.192997°E / 12.617475; 80.192997 |
பெயர் | |
பெயர்: | மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் |
அமைவிடம் | |
ஊர்: | மாமல்லபுரம் |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உலகுய்ய நின்ற பெருமாள் |
தாயார்: | நிலமங்கை நாச்சியார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | உண்டு |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Thirukadalmallai_Temple.jpg/640px-Thirukadalmallai_Temple.jpg)
பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங்களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இங்குள்ள பெருமாளை பூதத்தாழ்வார் போற்றி,
அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்று போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.
புண்டரீக புஷ்கரணி குளம்
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7–ஆவது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர். இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்’ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகின்றனர்.
பின்னர் அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1,000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார். இந்த நிலையில் குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர், ‘நீ! மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்துக் கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்துக் கொண்டிருந்த தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.
அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும். மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார்.
பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தைவிட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.